ஆசானை மதிப்போம் (நேரிசை வெண்பாக்கள்)
ஆசானை மதிப்போம் - 1
1. ஆசானும் சொல்லும் அறவுரைக் கேட்டுநிதம்
நாசங்கள் செய்யாத நற்குணத்தால் - தேசத்தில்
பாசங்கள் பூத்திடவே பார்த்திருப்போம் தீஞ்செயலின்
தோசங்கள் நீக்கச்செய்த் தொண்டு.
- தங்கை பாலா ஆசினி, சேந்தன்குடி.
2. ஆசானைப் போற்றி அறிவே துணையாக
பேசா திருந்து பெறுவாயே - கூசாது
நேசமாய் நன்னெறி நேர்மையாய்ப் பெற்றுமே
பாசமாய் கல்வியைக் காண்.
- பா. இந்திரன்.
3. துன்பமிகு வாழ்க்கை துடைத்திடும் நோக்கிலே
இன்பமிகு கல்விதரும் இன்முகனார் - என்றென்றும்
தன்னலம் பேணாத தெய்வத்தைத் தாள்பணிந்தே
உன்னல் மதிக்கும் உலகு
- தமிழுறவன்.
4. அகர எழுத்தை அழகுடன் ஓதி
சிகரம் தொடவே சிறப்புப் - பகர்ந்திட
குற்றம் களையும் குருவை மதித்திடு
சுற்றம் பெருகும் சுழன்று.
- ந. முருகன்.
5. எழுத்தறி வித்தவன் ஈசனுக் கீடாம்
பழுதிலாக் கல்வியைப் பற்றி - விழுதென
ஆசான வர்தம் அறிவுரை கேட்கநிதம்
பேசாத வாயில்லைப் பின்பு.
- மணி தியாகேஸ்.
6. நெஞ்சின் பழுதகற்றி நேர்மைத் திறன்களெல்லாம்
அஞ்சா துரைப்போனே ஆசானாம் - எஞ்ஞான்றும்
வஞ்சமிலா வாழ்வுக்கு வாட்டமின்றி வித்திடும்
நெஞ்சரை நெஞ்சுள் நிறை.
- கவிஞர் முகிலை பாஸ்ரீ.
7. அவனியில் ஆசான் அறிவுரை யேற்றுக்
கவனமாய் வாழ்வில் கருத்தாய்த் - தவமாய்
மதிப்போம் குருவை மனநிறை வோடு
துதிப்போம் அகம்பெறும் தூ.
- தா. தமிழ் தங்கராஜ்.
8. அறிவகலை ஏற்றும் குருவை மதிப்பாய்
நெறிகளைக் கற்பித்தே நிற்பார் - செறிவுடன்
ஏணியாய் நின்றிங்கே ஏற்றிடச் செய்வாரே
தோணியாய்க் காப்பார் தொழு.
- மு.வா.பாலாஜி.
9. அறிவைத் தருகின்ற ஆசிரியச் சான்றோர்
செறிவைத் திறனுடன் சேர்க்கும் - நெறியாளர்
வாழ்வில் வணங்கியவர் வாழ்த்துகளைப் பெற்றுவிட்டால்
தாழ்வெல்லாம் நீங்கும் தணிந்து.
- கவியழகன்.
10. அறிவார்ந்த சிந்தனையில் ஆட்படுத்தி நாளும்
செறிவாக வாழ்க்கை செழிக்க - குறியாக
ஆசிரியர் என்னுமோர் அம்மையப்பன் வந்தாரே
காசினியில் தெய்வந்தான் காண்.
- ஞால ரவிச்சந்திரன்.
11. அறிவின்கண் ஊற்றாய் அமர்ந்தவர் ஆசான்
நெறியினைத் தந்துமே நெஞ்சில் - செறிவாய்
குருவே நமது குறைகள் களைவார்
தருகின்ற இன்பம் தரம்.
- கோ பாலசுப்ரமணியன்.
12. எண்ணும் எழுத்தும் எமக்கே யறிவித்துக்
கண்ணா யெமையுமே காத்திடும் - எண்ணிலா
ஆசான்கள் தம்மையே அன்புடன் போற்றிடப்
பேசாமற் பெற்றிடலாம் பேறு.
- செல்வராஜா சுதாகரன்.
13. போதிக்கும் ஆசானைப் போற்றினால் வாழ்வினில்
சாதிப்போம் நாளும்நற் சாதனைகள் - மேதினியில்
வாதிட்டால் வன்மம் வளர்ந்திடு மென்பதால்
கோதில்லா கொள்கையைக் கொள்.
- கண்ணன் நடராஜன்.
14. பற்பல முன்னேற்றம் பாரினில் ஏற்பட
நற்பயன் செய்வார் நயமாக - பற்றுடன்
ஆள்கின்ற ஆசானை ஆட்பட்டு நின்றிடின்
மீள்கின்ற மேன்மைப் பயன்.
- சரஸ்வதிராசேந்திரன்.
15. எழுத்தறி வித்தவன் என்றும் இறைவன்
முழுவதும் வாழ்வின் முதலே - பழுத்த
அறிவினைப் பண்பாய் பகிர்பவன் ஆசான்
நெறியுடன் போற்று நினைந்து.
- ஆ.த. குணத்திலகம்.
16. கற்றிடல் வேண்டுமாம் கல்வியை யாண்டுமே
பெற்றிட ஆசானின் பேற்றினால் - பற்றிடப்
பற்றாய் அறிந்துமே பண்பில் தெளிவாக
முற்றாய் சிறந்து முடி.
- கோ. அருச்சுணன்.
17. வாழ்வினில் நாமும் வளமையைப் பெற்றிட
ஊழ்வினை மாற்றி உவப்புற - வாழ்ந்திட
ஏணிப் படியாய் இருந்திடும் ஆசானை
மாணிக் கமாக மதி.
- மஞ்சுளா ரமேஷ்.
18. அகரம் துவங்கி அரிதாரம் ஈறாய்
ககரம் முதலாகக் கல்வி - பகவன்
அகமகிழ நாளுமே அன்பைப் பொழிந்தே
இகத்தினில் வாழ்தல் இனிது.
- கவி. செங்குட்டுவன்.
19. தன்னல மின்றியே தாரணியில் சான்றோனாய்
உன்னலம் போற்றியும் ஊக்குவித்தே - நன்னெறி
கன்னலிடை தேன்சிந்தும் கல்வியறி வூட்டியநல்
மேன்மைகொள் ஆசானே மேல்.
- க. செல்வநேசன்.
20. அறிவைப் புகட்டிடும் ஆசான் கடவுள்
நெறியினை நீதியை நேர்மை - மறையைக்
குறிப்பால் உணர்த்திடும் கொள்கையின் குன்று
மறவோம் மதிப்போம் மனத்து.
- தளவை. வில்லவன் கோதை.
21. மண்ணாய்க் கிடப்பவரை மாமனித ரென்றாக்கிக்
கண்ணாய் கருத்தாய்நற் கல்வியொடு - பண்பையும்
போதிக்கும் ஆசானைப் போற்றுவோம் சாற்றுவோம்
மேதினியில் ஆசானே மேல்.
- மீனா கோபி.
22. எண்ணம் எழுத்தோடும் ஏற்றமுறக் கற்பித்துக்
கண்ணென மாணவரைக் காத்திடுவார் - பண்போடும்
அன்பையும் ஊட்டுகிற அற்புத ஆசானின்
இன்மு கமதே இனிது.
- எம்.ஆர். ஜெயந்தி.
23. அன்புடன் ஆசான் அறிவுரை கேட்டிட
இன்னல் களைந்திங்(கு) இனியவை - என்றென்றும்
நன்மை பலபெற்று நாளும் உயர்ந்தினி
என்றும் மகிழ்வாய் இனி.
- றூபா அன்ரன்.
24. நெறியினைக் கற்பித்து நேர்வழி காட்டும்
அறிவார்ந்த சான்றோராம் ஆசான் - செறிவாய்த்
திறனுடன் கற்றறிந்து தீரமுடன் வாழ
மறவாமல் போற்றுதல் மாண்பு.
- ஓசூர் மணிமேகலை.
25. கற்றிட நன்றெனக் கல்வியைத் தந்திடும்
சிற்பிதான் ஆசானின் சேவையும் - பற்றிட
பொற்பதம் போற்றியும்நல் பைந்தமிழால் வாழ்த்திடுவேன்
சொற்பித்த பாடம் சிறந்து.
- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.
ஆசானை மதிப்போம் - 2
26. நெற்றினிலே திட்டதுபோல் நீற்றதுவாய் கொண்டிறையோ
பெற்றதுபோல் கொண்டிடுதே பற்றதுவாய் - பெற்றிட்ட
வெற்றியெல்லாம் கற்றிடுதே வெற்றிடுவே வித்திடுதே
மற்றெதுவும் பெற்றிடுமோ மாற்று.
- இரா பாலா, சென்னை.
27. நோற்றவர்கள் பெற்றவர்கள் நோற்றதின் நற்பயனே
ஊற்றாக தோற்றமான உற்றாரே - சாற்றுகின்றேன்
நூற்பலவே கற்றவர்கள் நற்சான்றோர் கற்பிப்போர்
போற்றிடவே வெற்றிவரும் பார்.
- குயில்.மு இரசியா பேகம்.
28. அறிவை யடைய அருகி லமர்ந்து
நெறியினைக் கற்றுமே நேர்மை - செறிவில்
வறியவர்கள் மாந்தர் வழங்கி யுயர்த்தி
அறியவும் வைக்க குரு.
- பிரபு ஐயாத்துரை.
29. அறிவைத் தருமுன(து) ஆசானைப் போற்றி
திறமை அளவைத் தினமும் - அறிந்தே
உலகம் வியக்கும் உயிரென உன்னைப்
பலருமே பாராட்டப் பார்த்து.
- நா.பாண்டியராஜா.
30. ஞானமே போதித்து நானிலத்து வெற்றியே
ஊனமின்றிப் பெற்றேனே ஓங்கிட - மானமென
நானும் மதித்திட ஞானமும் பெற்றிட
வானுலகே ஆசானை வாழ்த்து.
- இரா. மீனாட்சி சுந்தரம், கோவை.
31. கற்றுத் தெரிந்தவர் கல்வியில் செம்மலாய்ப்
பெற்றுமே வாழும்நற் பேரறிவு - கற்பித்தல்
போற்றும் பெருந்தகையின் பேராற்றல் மாணாக்கர்
ஏற்றிட ஆசான் எரு.
- பாக்கியலட்சுமி சத்தியநாராயணன்.
32. ஆசானைப் போற்றி அனுதினம் நீயுந்தான்
பூசனைகள் செய்து புகழ்ந்திடுக - கூசாமல்
அன்னைதந்தை யர்க்குப்பின் னாசிகள் பெற்றிடுக
அன்னாரின் பாதம் பணிந்து.
- செல்லமுத்து பெரியசாமி.
33. எழுமையும் பின்வரும் ஏற்புடை கல்வி
வழுவிலா வாழ்வில் வளமாய் - பழுதிலா
யோசித்து நீநடக்க புத்தாக்கம் செய்கின்ற
ஆசிகள் என்றென்றும் அன்பு.
- வேங்கடலட்சுமி ராமர்.
34. அறியாமை போக்குகின்ற ஆசானைப் போற்றித்
தெறிக்கின்ற எம்மருங்கும் தேசம் - செறியாய்ப்
பெருக்கெடுத் தூற்றாகப் பாய்கின்ற நல்ல
பெருமையான வாழ்வைப் பெறு.
- அ. அகிலன்.
35. கற்பிக்கும் ஆசான் கடவுளைப் போன்றவர்
பெற்றோராய் மாறி பெருமைதரும் - உற்ற
உறவை மதித்தும் உயர்த்தியும் போற்றிச்
சிறப்பைத் தருவது சீர்.
- மாலதி திரு.
36. நற்றமிழ்க் கற்றிடு நன்மை விளைந்திட
நற்குணம் காட்டிடு நாற்றிசை - போற்றிட
இற்றிசை எங்குமே இன்பம் பெருகிட
பொற்பாதம் தொட்டே பழகு.
- ம பழனிச்சாமி.
37. ஆசு களைந்தே அறியாமை நீக்கியே
மாசுகள் இல்லா மனங்களாக - வீசும்
பசும்பொழில் சூழுலகில் பேசுகின்ற ஆக்கும்
விசும்பில் நலத்தால் வியந்து.
- கு.மலர் செல்வி.
38. குற்றங் களைந்து குணமீந்து நன்றாகச்
சுற்ற மனைத்துஞ் சுகம்பெறச் - சற்றும்
பழுதிலாக் கல்வி புகட்டுங் குருவை
வழுவாது நீயுமே வாழ்த்து.
- த.கி.ஷர்மிதன், இலங்கை.
39. கற்கக் கனிந்திடும் கல்விதான் மாந்தரும்
பெற்றிட நின்று குருவினது - சொற்படி
பற்றிடும் நற்பண்பால் பாதம் பணிந்துநீ
பாரிற் சிறந்து படி.
- விஷ்வசீதா அட்ரநாதன், சுவிற்சர்லாந்து.
40. பொதிந்தபண்பின் ஆசானைப் போற்றி மகிழ
புதிதாக்கும் சிந்தை புகுத்த - கதியாய்
மதிக்கும் உணர்வை மனத்துள் நிறைத்தே
உதிக்கின்ற ஆற்றல் உணர்.
- கா. சரவணன்.
41. மதிப்போமே ஆசானை மண்ணின் திருவைத்
துதிப்போம் மனத்தால் துயரின் - விதிமாறும்
உள்ளத்தில் தெய்வமாக உள்ளளவும் ஊழ்வினை
வெள்ளத்தில் போய்விடும் வென்று
- ஆனந்த் சுந்தரராமன்.
42. ஆயகலை கற்கவல்ல ஆசானைப் போற்றியே
தூய மனத்தில் துணைநிற்க - பாயும்
செயல்கள் வழிதனில் சீரிய சிந்தை
உயர்வினைப் பெற்றே உணர்.
- இராசையா கௌரிபாலா.
43. நல்லாசான் கற்றறிந்து நல்கிடா ஞானமது
இல்லாதான் வாழ்வு இனிதாமோ - கல்லாத
மாந்தர்க்கும் சேருமோ மாண்பதுவும், நன்றெனவே
வேந்தருக்கு வேண்டுமே கல்
- சாத்தூர் கிருஷ்ணதாசன், கோவை.
44. வெறுப்பை உடைத்துக் கறுப்பை அறுத்துப்
பொறுப்பைப் புரிந்து பொருப்பாய் - சிறப்பாய்
இரவகம் மாய்த்தே அறிவகம் கூட்டி
வரமாய் முகிழ்த்த வரம்.
- இராம.அழ. கார்த்திகேயன், மதுரை.
45. பண்பது கொண்டு பணிவாய் உயர்ந்திட
மண்ணதும் எங்கும் மதிப்புடன் - புண்ணாக
மாசதைக் கொண்டிடா மாநிலம் போற்றிட
ஆசானைப் போற்றியே வாழ்த்து.
- வினோ பிரகாஸ்.
46. அகரம் தொடங்கும் அறிவினைப் பெற்றே
சிகரத்தைத் தொட்டேன் சிறப்பாய் - இகத்தில்
சிறந்திட நின்றிட சிந்தை முழுதும்
மறந்திட மாட்டேன் உனை.
- கவிஞர். முத்து. பரமசிவம்.
47. ஞானமே போதித்து ஞாலமும் வென்றிட
ஊனமின்றிக் கற்றேநாம் ஓங்கிட -
வானமாய்
ஆசு களைந்தே அறியாமை போக்கிய
ஆசானைப் போற்றியே வாழ்த்து.
- தனம் மீனாட்சிநாதன்.
48. விடியலை தந்த விளக்காக ஆசான்
கடிதாய் உரைத்துக் கவலை - நொடியில்
மிடிமையைப் போக்கி மடிமையை நீக்கிப்
படியாய் உயர்த்துவார் பார்த்து.
- நகுலா சிவநாதன்.
Comments
Post a Comment