தாய்மையைப் போற்றுவோம் (நேரிசை வெண்பாக்கள்)
தாய்மையைப் போற்றுவோம்
(நேரிசை வெண்பாக்கள்)
1. அன்னையவள் காட்டுகின்ற அன்பிற்கே ஈடில்லை/
கண்ணைப்போல் காப்பாள் கனிவுடனே - தன்னன்பில்/
ஓய்வறியா மாதரசி உண்மை ஒளிவிளக்காம்
தாய்மையைப் போற்றுத் தணிந்து ./
- கவியழகன், திருவொற்றியூர்.
2. அன்பை விதைத்தே அறிவை வளர்க்கின்ற/
அன்னையின் தொண்டு சிறப்பாகும் - என்றும்/
அவளைநீ நெஞ்சிலே அன்புருக வேண்ட/
கவலைகள் தீர்ந்திடும் காண்./
- நா.பாண்டியராஜா, இராசசிங்கமங்கலம்.
3. அன்பினாலே உண்டான அன்னையவள் மட்டுந்தான்/
தன்னுயிரை நோக்காது தந்திடுவாள் - மன்னிப்பும்/
நல்கிடுவாள் பிள்ளைகள் நல்வழியில் வாழ்ந்திடவே/
பல்வகையில் நிற்பவளே தாய்.
- க. லட்சுமி ராம்பிரசாத், திருச்சிராப்பள்ளி.
4. தாயவளை நித்தம் தயவுடன் காத்திட /
நேயமுடன் தந்திடுவாள் நேசத்தை - மாயங்கள் /
செய்து மதிப்புறவும் செய்திடுவாள் எந்நாளும் /
உய்யும் வழியிதுவே உன்னு /
- மஞ்சுளா ரமேஷ் , காஞ்சிபுரம்.
5. தினமும் அமுதாய்த் தருபவள் அன்னை/
மனமும் கலங்கா மகிழ்வாய் - தினமே/
அருளும் துணையாய் அணைத்திட வேண்டும்/
பெருமைகள் போற்றிடப் பேறு./
- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.
6. அன்னையின் பார்வை அருள்மழை ஆனதே/
என்னயிது விந்தை இறைவனே - என்னையிந்த/
மண்ணில் உலவ மறுபிறவி பெற்றவளை/
விண்ணின்று காப்பாய் விரைந்து./
- கவிஞர் முகிலை பாஸ்ரீ.
7. அன்னை கருணையும் அன்புமான பார்வையால்/
முன்னையுயிர் ஓங்கி முனைப்பாலே - என்றென்றும் /
மண்ணுலகில் வாழ்கின்ற மாந்தர்க்கே யெல்லாமே /
விண்ணிகர் தாய்மை விளக்கு./
- அருச்சுணன் கோவிந்தராஜா.
8. உயிரினையும் தந்த உயிரேதான் ஆன/
பயிராக காத்தேநல் பாசம் - உயிராய்/
உடலாக ஈந்தே உருவம் கொடுத்த/
கடவுளை நாள்தோறும் போற்று./
- இந்திராணி தங்கவேல்.
9. தாய்மை உலகின் தனித்துவ விந்தையடா/
சேய்க்கோ அவளென்றும் செம்மலடா - தூய்மையோ/
தாய்மையின் உள்ளமெனத் தோன்றுமின்பக் கோயிலடா/
தேயுமோ தாயன்பு தான்./
- வில்லூர் பாரதி.
10. அழகிய பூவதாய் அண்டம் நிறைந்தே/
நிழலெனத் தூரத்தில் நின்றே - மழையாய்ப்/
பொழிந்த அகமதைப் போற்றியே வாழ்த்தி/
விழைந்திடவே வந்த வரம்./
- அ. சுதாமோகன்.
11. பத்துமாத பந்தத்தில் பாத்து ரசிச்சவ/
சித்தமே நானாக சீராட்டி - முத்தமே/
பட்டாகச் சேர்தணைத்துப் பாசமழை யாகிடவே/
கட்டாகச் சேர்த்துக் களி./
- வாசன் சாவி.
12. தன்னலம் இல்லாத தாய்மையின் அன்பினில்/
கன்னலாய் இன்பத்தின் காலங்கள் - என்றும்/
பயணம் இலக்கினைப் பாங்காய் அடைய/
உயர்ந்திடும் வாழ்வினில் உண்டு./
- கா.ந. கல்யாணசுந்தரம்.
13. அம்மா அடித்த அடியும் அரும்பாடம் /
சும்மா வராதிந்தச் சொர்க்கந்தான் - நம்பிடு /
தும்பைப்பூ வானவள் தூயத்தா யேயறிவாய் /
நம்மின் வரமாக நின்று./
- குயில். மு. இரசியா பேகம்.
14. பெற்றெடுக்கச் சேய்க்குப் பெருந்துன்பம் தான்தாங்கிப் /
பொற்பதத்தாள் போய்வீழ்ந்தாள் பேரிடியுள் - கற்புநெறி /
உற்றவள்தான் ஓர்மகவாய் உன்னைத்தான் ஈன்றெடுத்தாள் /
பற்றுடனே போற்றிடுவாய் தாய்./
- வில்லவன் கோதை, அண்ணாமலைப்புதூர்.
15. பட்டினியாய்த் தான்கிடந்து பாலூட்டித் தாலாட்டிக்/
கட்டி யணைத்தெமைக் கண்மணியாய் - இட்டமுடன்/
தட்டிக் கொடுக்குமெந் தாயவள் பொற்பாதந்/
தொட்டு வணங்கித் தொடங்கு./
- மணி தியாகேஸ், ஈழம்.
16. வாய்விட்டுப் போற்றியே வாழ்நாள் முழுவதும்/
தாய்மையைப் போற்றுவோம் தாங்கியே - சேய்மையின்றிச்/
சேய்நலன் காக்கின்றச் சேவக மாண்புடை/
தூய்மையைக் கும்பிட்டே தூக்கு./
- கவிஞர் தா. தமிழ் தங்கராஜ்.
17. பாசத்தைக் காட்டிப் பழமொழிகள் தான்கூறி /
நேசத்தில் நல்ல நினைவுறுத்தி - தேசத்தில்/
கண்கண்ட ஆசான் கருயேந்திக் காத்தவளாம்/
மண்ணில் அவரேதான் மாண்பு./
- தனம் மீனாட்சிநாதன்.
18. பாடிப் பரவியே பார்தனி லன்னையைக்/
கூடிப் பணிந்துமே கும்பிட்டு - நாடியே/
ஈடின்றி யென்று மிருந்துமே போற்றிடக்/
கேடின்றி வாழலாம் கேள்./
- செல்வராஜா சுதாகரன்
19. முன்னறி தெய்வமாம் முத்தான தாயவள்
என்னையு மிவ்வுலகி லீன்றெடுத்தே - என்றுமென்
துன்பங்கள் நீக்கித் துயரங்கள் போக்கியே
அன்புடன் காப்பா ளவள்.
- ஆ.த. குணத்திலகம்.
20. கருவினில் நம்மைக் கருத்தாய்ச் சுமந்தே /
உருவம் தருவாள் உணர்வாய் - செருக்கின்றி /
வாய்மை நெறிப்படி வாழ்ந்திடும் தெய்வமாம் /
தாய்மையைப் போற்றுத் தனித்து. /
- ந. முருகன்.
21. தந்தை யவனைத் தரணித் துணையாக்கித்/
தந்திட்டாள் நம்மை தரணிக்கு - வெந்தனலில்/
வெந்திட நாம்தான் விடலாமோ அன்னையைச்/
சிந்தனைசெய் மேதினிற்கு சீர்.
- தி. இராஜபிரபா, தேனி.
22. கருவினிற் றாங்கிக் கலையாது காத்துக்/
குருதியைப் பாலாய்க் கொடுக்கும் - திருவினைத்/
தாழ்வது வின்றித் தரணியில் நன்றுற/
வாழ்வுள் ளவரையில் வாழ்த்து./
- த.கி.ஷர்மிதன், மட்டக்களப்பு.
23. கருவோடு தாங்கி கருணையில் ஓங்கி/
உருவாக்கி நின்றிடுவார் உண்மை - தருவாரே/
ஊக்கம் பெரிதென ஊன்றுகோலும் ஆவாரே/
ஆக்கம் அவரே அறி./
- மு.வா.பாலாஜி.
24. நெஞ்சகத் தூய்மையின் நேசமது தாய்மையே /
சஞ்சலத்தை மாற்றியும் சாதிக்கும் - அஞ்சுகமே/
கொஞ்சும் குழவியும் கேண்மையும் ஊக்கிடும்/
அஞ்சாமை அன்புடைத் தாய்./
- கனகசபாபதி செல்வநேசன், அல்வாய்.
25. உடலால் மெலிந்தே உணர்வால் உருகி/
திடமாய் வளர்க்கும் திருவே - கடக்கும்/
தடத்தில் பதித்த தனிமைத் துணிவால்/
மடமை யொழிந்த மலர்./
- தங்கை பாலா ஆசினி, சேந்தன்குடி.
26. தாய்மையைப் போற்றி தவிப்பினை வென்றிட/
சேய்மையும் தானென்றும் செக்கெனவே - வாய்மையுடன்/
தூய்மையின் உள்ளமெனத் தாய்மையைப் பாராட்டி/
மாய்கின்ற வேளையிலும் மாண்பு./
- ஜெயார்.
27. தூய்மை மனமுள்ள திங்களாம் தம்மனையாள்/
தாய்மையில் ஈடில்லா தாரகையாம் - காய்மகாரம்/
இல்லாத பெண்ணவளின் இல்லாண்மைக் கண்டுநாளும்/
பல்லாண்டு வாழ்கவெனப் போற்று./
- தமிழுறவன்.
28. தன்னலம் இல்லாத் தனித்துவம் பெற்றவள்/
அன்பை விதைத்தே அகிலத்தில் - இன்னல்கள்/
போக்கி இனிமை பகர்பவள் அன்னைதான்/
காக்கும் கடவுள் கருது./
- காரைக்குடி கிருஷ்ணா.
29. கருவினைத் தாங்கி கனவினை ஊட்டி/
உருவேற்றி வைத்தாள் உமையாள் - வருவாய்/
திருவாய் அறங்கள் தழைத்திடச் செய்வாய்/
தருவாய் அவளுக்குச் சான்று./
- வேங்கடலட்சுமி ராமர்.
30. ஐயிரண்டுத் திங்களோ(டு) அப்பாரம் தீராமல்/
கையிரண்டில் தாங்கிடுமென் தேவதையே - தையிருகை/
தாங்கியே உன்னிரு சீறடிப் போற்றியே/
பாங்குடன் பாடுவதே நேர்./
- முனைவர். பாரதி சிவசங்கரி.
31. தாயவள் அன்பில் தரணியை வெல்லலாம்/
சேயவள் செய்யும் செயல்களின் - மாயவளாய்த்/
தூயவள் தோன்றியும் துஞ்சும் பொழுதினில்/
தாயவள் நம்மருகே தான்./
- பாக்கியலட்சுமி சத்தியநாராயணன்.
32. புதுவுறவைத் தாரணிக்குப் புன்னகையால் தந்தே/
மதுவருந்தும் தன்கணவன் மாண்டால் - ஒதுங்கி/
குதூகலம் குன்றிக் குழவிதனைப் பாராள்/
சதுப்புயனின் சக்தி யவள்./
- முருகன் ஊர்க்காவலன்.
33. உலக உறவில் உயர்ந்தது தாய்மை/
கலப்பில்லாப் பாசம் கனியும் - நலமாய்/
வழிந்திடும் காவிரி வெள்ளமாய் கண்ணில்/
அழியாத அன்பை அளித்து./
- கண்ணன் நடராஜன்.
34. கருவில் எனைத்தாங்கிக் கண்ணாகக் காத்த/
உருவினில் உன்போலே என்னை - அருமை/
உலகத்தில் என்றனையும் ஈன்றே எடுத்தாய்/
கலகத்தில் கைவிடேன் காண்./
- சிங்கை கார்முகிலன்.
35. தன்னல மில்லாத தாயவள் தெய்வமே/
தன்னலம் பிளைக்காய் நாளுமே - உன்றனையே/
கண்ணும் கருத்துமாய்க் காப்பாள் கருணையால்/
எண்ணுக தெய்வமே என்று./
- கவிஞர். கேசவ தாஸ்.
36. அன்பாய் அணைத்திடுவாள் அன்றாடம் நம்மையே/
தன்னல மின்றியே தந்திடுவாள் - தன்னுயிரை/
என்றைக்கும் தெய்வமாய் எண்ணி வணங்குவோம்/
அன்னை வடிவமே அன்பு./
- கவிஞர். மீராஸ்ரீ.
37. அன்புகோர்த்த அன்னையே ஆன்றபெரும் தெய்வமாகி
என்றுமே தாய்மையை ஏற்றமொடு - நன்றுடனே /
போற்றிடு பூவுலகில் பேர்புகழ் பெற்றிடுவாய், /
கற்றிடுவாய் அன்னையைக் காத்து./
- இரா. மீனாட்சி சுந்தரம்.
38. அன்பை அளித்தே அகிலத்தை ஆண்டேதான்/
இன்னல் களைந்தே இதயத்தினில் - தன்னலம்/
இன்றியே தாயாகி ஈங்கே நடமாடும்/
அன்னை கடவுளுக்கு நேர்./
- கிருஷ்ணலதா வசீகரன்.
39. குற்றங் களைந்து குறைகளும் நீங்கவே/
பெற்று வளர்க்கப் பெருமையாய் - உற்றவர்/
சுற்றங்கள் எல்லாம் சிறக்கவே கூறிட/
பற்றைத் தருவாளே தாய்./
- சோ. சுந்தரேசுவரி.
40. சித்துருவாய்க் காத்துச் சிலையெனச் சீராக்கி/
வித்தாய் நமையீன்ற வித்தகி - முத்தெனப்/
பத்துத்திங் கள்சுமந்து பத்திரமாய்ப் பாதுகாக்கும்/
இத்தாய்மை போற்றுதல் நன்று./
- ம பழனிச்சாமி.
41. தாய்மொழி யானத் தமிழினை யூட்டியே //
சேய்களைக் காத்துச் சிறப்புடன் - வாய்மை //
இணையிலா தென்றே இயம்பி வளர்த்துத் //
துணையென் றறிந்தே தொடங்கு.//
- சரஸ்வதிராசேந்திரன்.
42. அண்டம் படைத்தவனென்(று) ஆண்டவனைப் போற்றும்முன் /
பிண்டம் சுமந்தவளைப் போற்றிடு - கண்ணெதிரே /
கண்டமெய்யாய்க் கொண்ட கருணைக்கீ டில்லையறி/
அண்டகம்தாய் வைத்துச்செய் அன்பு./
- பொதியன் செல்வம், அய்யாபுரம்.
43. அன்பெனும் சொல்லின் அகராதி தாய்மையே/
பின்னு மொருதெய்வம் பூவுலகில் - அன்னையன்றி/
இன்னும் உளதோ?... இதையுணர்ந்து வாழ்ந்திடில்/
மண்ணுலகம் வாழ்த்தும் மகிழ்ந்து./
- ந. மீனாகோபி, சென்னை.
44. அன்புடன் நாளும் அழிவினில் காத்திட/
நன்மை உருகொண்டு நானிலம் - தன்னிலே/
என்றும் இனியவை எல்லோர்க்கும் சேர்த்திட்ட/
அன்னையைப் போற்றல் அழகு./
- இர. அரவிந்த் கார்த்திக், காஞ்சிபுரம்.
45. பெண்மையது கொண்ட பெருமையும் ஓங்கிட/
பண்பதை ஊட்டிப் பணிவுடன் - வெண்மையாய்/
வாய்மை உரைத்திடும் வாழ்வது வாழவே/
தாய்மையை வாழ்த்திநீ போற்று./
- வினோதாயினி ஜெகப்பிரதாஸ், சுவிற்சலாந்து.
46. அன்பிற்கே ஆரம்பம் அன்னை யவள்தானே /
அன்னை உறவுதான் ஆறுதல் - தன்னை /
அகிலத்தை ஆளும் அதுவேதான் போதும் /
மகிமை உணர்ந்திடின் நன்று./
- இந்திரகுமார் ஜமுனாமலர், ஜெனீவா.
47. உதிரமதை ஊட்டி உணர்வதை ஏற்றி /
மதியாய் முகத்தில் மலர்வாள் - மதியில் /
கதிரவன் நோக்கும் கமலமாய்ப் பூக்கும் /
புதிரோ புவியும் பணிந்து. //
- இரா பாலா, சென்னை.
48. அன்னை உருவத்தை ஆண்டவன் தோற்றத்தில்/
இன்முகம் ஈட்டுகின்ற ஈடில்லா - இன்பத்தால்/
பண்பாய் அரவணைத்துப் பாசமாய் ஊட்டுவாள்/
ஆண்டவன் போல அருள்./
- அங்கயற்கண்ணி செல்வக்குமார், சுவிற்சர்லாந்து.
49. அன்பின் மறுவடிவம் அன்னையே ஆகிடுவாள்/
தன்னையே ஈவாளே தன்மகவு - மன்னுபுகழ்/
நல்லன வெல்லாம் நலமோடு பெற்றுவாழ/
இல்லை அவளுக்கோர் ஈடு.
- செல்லமுத்து பெரியசாமி.
50. தன்னலம் இல்லாத தாய்மை உயர்ந்ததே/
மென்மையின் உள்ளமது மாண்புற - தன்னுள்/
உதித்திட்ட சேயை உயிராய் நலமாய்/
கதியாகக் காத்திடுவாள் காண்./
- இராசையா கௌரிபாலா, இலண்டன்.
51. கருவறைக் கூட்டில் கருத்தாய் சுமந்தே / உருவம் பெறவும் உதிரம் - தருவாள் / பருவம் கடந்தும் பரிவுடன் தாயும் / அருகில் இருந்திட வாழ் ./
- கு. மலர் செல்வி, மதுரை.
52. தன்னலம் பேணாத தாயே உயிரேதான் //
மன்றினில் காத்திட மாவீரன் - என்றென்றும் //
தந்து மிளிர்ந்தாய் தரணியைக் காத்துநீயும் //
முந்தியே நின்றாய் தனித்து./
- ஐயாத்துரை. பிரபு, வேம்படி.
53. வரமென்று வந்தவளை வாழ்வில் வசந்த/
மரமொன்று தந்தவளை மண்ணில் - சருகாய்/
மதிப்போர்க்கு வாழ்விலை மங்காத் தமிழாய்த்/
துதிப்போர்க்குத் துன்பம் தொலை.//
- ஆனந்த் சுந்தரராமன், மேட்டூர்.
54. தாய்மையே தாரணியில் தன்னிக ரற்றது/
வாய்மையும் கூறிடுமே வாணாளில் - பொய்யென/
யாவரும் கூறுவரோ யாங்கனும் கண்டோமோ/
பாவலரும் போற்றுவார் பார்./
- சாத்தூர் கிருஷ்ணதாசன், கோவை.
55. தாய்மையின் அன்பு தரணியில் ஓங்கிடும் /
வாய்மை யவளது வற்றாத - தூய்மை /
பனிதனின் சாரல் பொழியும் கருணைக் /
கனிவினைக் காட்டும் கடல்./
- சியாமளா ரகுநாதன்.
56. பெற்ற குழந்தை பெருமைப் படவேதான் /
உற்ற முயற்சி உருவாக்கிக் - கற்றிட /
மற்ற விடயமெல் லாம்நமக்குக் கற்பித்தே/
பற்றிட வைப்பவள் பார்./
- கவி. செங்குட்டுவன்.
57. அன்பான உள்ளத்தில் அன்னையைக் கொண்டேநாம் /
பண்பை வளர்க்கின்ற பாங்கினில் - அன்பாலே /
இன்பமும் துள்ளிட தன்பாலே மெல்லமெல்ல /
அன்பைத் தருவார் அகம்./
- க. குணசேகரன்.
58. அம்மாவே என்றே அழைப்பேன் உலகினில்/
சும்மா அவளைச் சுமப்பேனே - தம்மை/
அருமருந் தாக்கிய அன்னை யவளே/
கருவினில் தாங்கியவள் காண்./
- ஏஞ்சல் சோபியா.
59. தாய்மை நிலையைப் பெறுகிற நாள்முதல்//
சேய்தன் நலமும் சிறப்புற - தூய்மை//
அறிந்தும்தன் தொப்புள் அறுபடும் முன்னர் //
நெறிவழி நிற்க நினை./
- முனைவர். இரா. வரதராசன்.
60. அன்னையின் அன்பில் அகமும் மகிழ்ந்திட//
குன்றாத அன்பால் குணத்துடன் - பன்மடங்கு //
வாய்மை கலந்தேதான் நம்வாழ்வில் ஊட்டிடும்//
தாய்மையைப் போற்றுத் தணிந்து./
- மா. பிரேமாவதி, ஊரப்பாக்கம்.
61. பொதுநலம் போற்றும் பொதுமையைக் கற்றிட /
ஒதுங்காது கல்வியில் ஒன்றாய் - அதுவாய் /
தீது கலவாத தீந்தமிழ்ப் பண்பினை/
மூதுரையாய் வீசுபவள் தாய்./
- கா. சரவணன்.
62. அன்னையாய் வந்திங் கணைத்துமிகத் தாலாட்டி/
என்னை வளர்த்தேதான் ஏற்றமுடன் - தன்னை/
வருத்தியும் தக்கவனாய் வாழ்வதற்கே என்றும்/
உருப்படவே வைத்தாய் உவந்து./
- யதன் கணேஸ்.
63. வாய்மையும் தூய்மையும் வாழ்வெனக் கொண்டிங்குத்/
தாய்மையைப் போற்றித் தொழுவீரே - நோய்மாற்றி/
வாழ்வினைப் போற்றியே வாழ்கின்ற காலத்தே/
வாழ்கவெனப் போற்றும் வரம்./
- வ. இராமதாஸ்.
64. அன்பில் நிறைந்தே அகிலமும் போற்றிட /
இன்பம் தருவார் இறைவியும் - அன்பினால்/
துன்பம் மறந்தும்தான் தன்னை வருத்தியே /
அன்பைப் பொழிவார் அகம்./
- விஷ்வசீதா அட்சரநாதன், சுவிற்சர்லாந்து.
65. கருதந்து காத்திருந்து காலம்பத் தாக /
உருதந்தே இவ்வுல கீந்து - தருமம் /
பலதந்து தன்மையாய் பேணி வளர்த்தே /
உலவவிட்ட தாய்தனைப் போற்று./
- மீ.மு. இஸ்மாயில், குளச்சல்.
Comments
Post a Comment