அன்பினால் ஆள்வோம் (நேரிசை வெண்பாக்கள்)

அன்பினால் ஆள்வோம் 


1.வன்மங்கள் விட்டோட வாழ்வே நலமாக /

இன்பங்கள் வந்தாட இன்றேதான் - இன்னலின்றி /

நன்னெஞ்சில் என்றென்றும் நட்புகள் கொண்டாட  /

அன்பினால் ஆள்வோம் அரசு./


- கவிஞர்.தா. தமிழ் தங்கராஜ்.


2. அன்பான நெஞ்சின் அழகு முகத்தினில்/

இன்னல் மறைந்திடுமாம் இவ்வுலகில் - என்றென்றும்/

மன்னுயிர் வாழ்ந்திட மாந்தர் மகிழ்ந்திட/

தன்னுயிராய்க் காண்ப தழகு./


- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.


3. இணையாய்ப் புறாக்கள் இருப்பது போலத்/

துணையுடன் வாழ்வாய்த் துணிந்தே - அணையிலா/

வெள்ளமாய் அன்பது வேகமாய் ஓடிடக் /

கொள்ளையாய் இன்பமே கொள்./


- செண்பக ஜெகதீசன்.


4. அன்றிலாய் அன்பை அனுதினம் நல்கிய/

இன்பமாய் என்றும் இணைந்திடு - வன்மமின்றி/

வாழ்க்கை வழியிலே வாழ்வாய், வசந்தமும்

வாழ்த்திடும் வந்துனை யே./


- சாத்தூர். கிருஷ்ணதாசன், கோவை.


5. விருப்புடன் செய்தல் விருந்தாகும் நன்மை /

பெருகிடச் செய்யும் பெருமை - அருகில்/

அரும்பதம் ஆனதோர் அன்பினால் ஆள்வோம்/

பெரும்பத மான தருள்./


- சரஸ்வதி ராசேந்திரன்.


6. உலகம் முழுதும் உலவும் மனிதா /

கலகம் அகற்றிடக் கற்றே - பலத்துடன் /

அன்பினால் ஆள்வோம் அகில உலகினில் /

இன்பம் பெருகும் இயம்பு. /

                   

- ந.முருகன்.


7. துன்பம் தினந்தோறும் தூரத்தில் சென்றுவிட்டால்/

இன்பம் ஒளியாய் இருப்பதுபோல் - அன்பினால் /

வாழ்க்கையில் ஒன்றாகி வாழ்வோர்க்கு  நன்மை/

உழைப்பினால் கிட்டும் உயர்வு./


- கரவையூர்.அ. அகிலன்.


8. எல்லோர் மனத்திலும் இன்புறு வார்த்தையால்/

பல்வித மாகவே பாசத்தை - நல்கிட/

எல்லையிலா வானந்தம் இப்பிறப்பி லுண்டுகாண் /

சொல்லா லணைக்கச் சுகம்.  /


- மணி தியாகேஸ்.


9. அன்பினால் என்றுமே ஆள்வோந் தரணியை/

அன்பினால் ஆகும் அமரநிலை - என்றதனால்/

கூடிக் களிப்போம் கொடுத்துண்டு வாழ்ந்திடுவோம்/

நாடி யவரை நயந்து./


- சி. உமாபாலன்.


10. அன்பான நெஞ்சம் அமைதியான வாழ்க்கையில்  /

இன்னல் மறைத்திடும் இன்பமும் - பொன்னாகும் /

நன்மைகள் செய்திட்டால் நட்பும் வளர்ந்திடும் /

வன்மம் விலகும் உணர்./


- தஞ்சை கோ. பாலசுப்ரமணியன்.


11. அன்பேதான் மன்பதையை ஆளும் மனிதனே/

வன்முறைக்கு இச்சகத்தில் வாழ்விலை - நன்னெறி/

சிந்தையில் ஏற்றிட சீராகும் நாடிதுவும்/

குந்தகமும் வந்திடுமோ கூறு./


- கவிஞர் கேசவ தாஸ்.


12. அன்பினால் ஆள்வோம் அகிலத்தில் எஞ்ஞான்றும்/

இன்பம் கொடுத்தே இதயத்தை - வென்றேதான்/

துன்பத்தை நீக்கி துயரதைப் போக்குதல்/

நன்றாம் நலத்தினைப் பெற்று./


- ஏஞ்சல்சோபிதா.


13. அன்பினால் ஆள்வோம் அகிலம் முழுவதும்/

அன்பே உறவின் அடைக்கலமாம் - அன்புள்ளம்/

கொண்டாரின் வாழ்வும் களிப்பாகும் எந்நாளும்/

தொண்டாக அன்பைத் தொடு./


- தமிழுறவன்.


14. அன்பே அகிலத்தின் ஆதார மாகிடும்

என்பதை நீயுமே எண்ணுக - நன்றுற

அன்பு பெருகி அனைத்துஞ் சிறந்திட

இன்பம் நிறையும் இகம்.


- த.கி.ஷர்மிதன், இலங்கை.


15. பாங்குடனே நல்லுரைகள் பாரினில்  கற்றுணர்ந்தே /

ஈங்கவர் துன்பநிலை ஈதொழிய - ஏங்குங்கால்/

கண்ணீர்மை நீங்கும் கருணை மொழியினால் /

உண்மையாய் வெல்வாய் உலகு./


- க. செல்வநேசன், இலங்கை.


16. அன்பால் உலகையே ஆளலாம் உண்மையாய்/

என்றும் செலுத்தினா லேற்றந்தான் - மென்மையாய்/

வாழும் முறையறிந்து வாழ்ந்திடுவோம் நன்மையாய்/

சூழு முலகிற்குச் சொல்./


- மு.வா.பாலாஜி.


17. அன்பே அகிலத்தில் ஆயுதம் ஆகிடின்/

துன்பம் அகன்றிடும் தூய்மையாம் - அன்பினால்/

இன்பமே கண்டிடும் இவ்வையகம் எந்நாளும்/

அன்பே அகத்தினை ஆள்./


- கலாராஜன்.


18. நெஞ்சினில் இன்பம் நிறைவாய் தவழவே/

வஞ்சம் மறந்துயிர் வாழ்ந்திடவே - தஞ்சமென/

உன்னிடம் வந்திடும் உண்மை உறவினை/

அன்பினால் ஆள்க அறம்./

     

- நா. பாண்டியராஜா.


19. அன்பே வலியதாம் ஆற்றலும் மிக்கதாம்/

தன்னல மில்லாத அன்பினால் - மன்பதையில்/

இன்பமும் கூடுமே இன்னுயிர் போற்றிட/

அன்பினால் ஆள்வோம் அறிந்து./


- ஓசூர் மணிமேகலை.


20. அன்பிலா மாந்தர் அனேகம்பேர் உள்ளதால் /

இன்னலால் சூழ்ந்ததே  இப்பூமி - அன்பினால்/

தன்பலம் கூட்டுமேல் தாரணிவாழ் மக்களினம்/

இன்பத்தால் நன்கியங்கும் ஈங்கு./


- கவிஞர் முகிலை பாஸ்ரீ.



21. இல்லறம் அன்போடும் இன்பம் அமைந்திட/

நல்லறம் கொண்டே நடந்திட - நல்லோரின்/

வார்த்தைகள் கேட்டேநாம் வாழ்வில் நலம்பெற்றே/

ஊர்மெச்ச வாழ்வில் உயர்வு./


- தனம் மீனாட்சிநாதன்.


22. ஆகுமந்த இன்பமே அன்பால் உருகிட/ 

வேகுமந்த உச்சியில் வெந்திட - வாகுமே /

நோகுமோ யானுமே நோக்காதி ருந்திட  /

பாகெனக் கண்டு பணி./


- வாசன் சாவி.


23. மண்மீது மக்கள் மகிழ்வாக வாழ்ந்திட.

கண்ணின் எதிரினில் காண்கின்ற - பெண்களை/

எண்ணத்தில் சீர்மையுடன் ஏற்றமுற வைத்திட/

விண்புகழ் எட்டும் விரைந்து./


- க. லட்சுமி ராம்பிரசாத், திருச்சிராப்பள்ளி.


24. அன்பினும் அற்புத ஆயுதம் இல்லையே/

அன்பிலார் நெஞ்சையும் ஆள்வதற்கு - அன்பினால்/

ஆகாத தேதுமில்லை அன்பெனும் ஈர்ப்பின்றி /

ஏகா துலகு சுழன்று./


- ஞால ரவிச்சந்திரன்.


25. அன்பின் இனியதோர் ஆரம்பம் புன்னகை/

அன்பே அகிலத்தின் ஆண்டவன் - என்றென்றும் /

இன்பமாய் ஒன்றை இனிக்கவே தந்திட /

என்றும் மனத்தினில் ஏற்று./


- இந்திராணிதங்கவேல்.


26. துன்பம் தொலைந்து துயரற்று வாழ்ந்திட

அன்புடன் ஆளும் அகிலத்தை - என்றுமே

இன்பம் பெருகியும் இன்னல் அழித்திட

அன்பால் அறத்தினால் ஆள்.


- கிருஷ்ணலதா வசீகரன், சுவிஸ்.


27. அறிவுரை சொல்லிடின் ஆகா தெனினும்/

மறித்திடல் செய்யாதே மாற்றாய் - நிறையே/

சிறப்பும் நிறைந்திடும் சிந்தனை ஓங்கிப்/

பிறப்பதுவும் அன்பால் புகும்./


- அ.சுதாமோகன், கோவை.


28. சாதனைகள் செய்திடவும் சண்டையின்றி வாழ்ந்திடவும் 

போதனைகள் செய்திடுமன் பொன்றுகொள் - வேதனைதான் 

சோதனைசெய் வேளையதில் சேர்வைக்கால் போல்வருமோர் 

மாதவநட் பாகவாழ்தல் மோடு. 


- பொதியன் செல்வம், அய்யாபுரம்.


29. அன்பினால் ஆள்வோமே அன்னத்தைத்  தந்துமே /

அன்னையை நேசி அனைவரையும் - தன்னுறவாய் /

விண்ணில் நிலவாக வீணை இசையாக /

மண்ணுலகில் வாழ்ந்து மலர்./


- பிரபு ஐயாத்துரை.


30. இன்பமும் பொங்கிட இன்னிசை ஓங்கிட /

துன்பம் துடைத்துத் துணிந்துமே - நின்றிட /

என்னிலை வந்தும் எழுந்துமே நின்றிட/

அன்பினால் ஆள்வோம் அகல்./


- றூபா அன்ரன்.


31. வாழும் உலகிலே வண்மையைக் காட்டிடப்/

பாழும் வயிற்றின் பசிப்பிணி - வீழுமே/ 

வாழுமோர் உள்ளத்தில் வாழ்வாங்கு வாழுமாம்/

ஏழுலகத் தையுமாளும் அன்பு./


- ம பழனிச்சாமி.


32. அன்பே உலகினில் அன்னை வரமதாய்  

என்றும் நிலையாகும் என்பேன்நான் - தன்னிலை

நின்று வளர்த்தேதான் அன்பினால் வாழ்த்திடும்

துன்பமிலா அன்பின் தொடர்.


- விஷ்வசீதா அட்சரநாதன்.


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)