மலரே மௌனமா (நேரிசை வெண்பாக்கள்)
மலரே மௌனமா:
(நேரிசை வெண்பாக்கள்)
1. மலர்ந்தே யிருப்பினும் மாசிவன் பாதம்
கலக்க முடியாமற் காய்ந்து - நிலத்தில்
விழுந்து கிடந்திடும் வேதனை தன்னால்
அழுந்தி வருந்தும் அறி.
- செல்வராஜா சுதாகரன்.
2. வலம்புரிச் சங்கே வலவன் மகளே
மலர்வா யழகே மனத்தில் - இலகாய்
இலகட மேறி இதய மலர்ந்தாய்
அலத்தியே பேசாம லன்று.
- தமிழுறவன்.
3. மல்லிகைப் பூவும் மணமுமே வீசிடும்
நல்லிதயம் காண நலமாக - நல்கிடும்
மெல்லிய காற்றுந்தான் மேனியைத் தொட்டுமே
சொல்லிச் சுவைக்குது சொல்.
- கலா கணேசன்.
4. மலரே வருவாய் மனத்தைத் தொடுவாய்
நிலவி னொளியில் நிழலாய் - உலவும்
புலவர் வரியில் புதுமை படைப்பாய்
மலரே மலர்வாய் மலர்ந்து.
- ஜெ.வசந்தி, பளை.
5. செவ்விதழ் நீதிறந்து செப்பிடுவா யோர்வார்த்தைக்
கொவ்வைப் பழவழகாய்க் கோமகள் - அவ்விதம்
பவ்விய மானநடை பைங்கிளியே யென்மார்பில்
திவ்விய மாயிருக்கத் தேன்.
- மணி தியாகேஸ்.
6. எண்ணத்தில் எப்போதும் இன்பத்தைத் தந்திடுதே
மண்மேல் முகிழ்த்த மலரதுவும் - வண்டினத்தை
வண்ணம் பலகாட்டி வாவென் றழைத்துமே
பண்ணிசைக்க வைக்கிற தே.
- மஞ்சுளா ரமேஷ்.
7. மலர்வாய் திருவாய் மனத்தில் மகிழ்வாய்
உலவும் குளிரில் உளமாய் - இலகாய்
உலகில் நலமாய் உயர்வாய் மலரே
புலரும் பொழுதினில் பூத்து.
- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.
8. மலரேநீ மெளனம் மணம்தான் மொழியோ
புலரும் விடியலும் பூவோ - உலகில்
இயற்கை யனைத்தும் இதமா யுணர்த்தும்
உயர்வின் மொழியை உணர்.
- ஓசூர் மணிமேகலை.
9. நாதம் இயற்றுமுன் நாமொழி சொல்கேட்டால்
ஓதமுறு தென்றலுக்கே போதைவரும் - சீத
நிலவொளியும் சொக்கிவிழும்; நித்திலமே காதல்
நிலவுமொழி நான்வாழச் செப்பு.
- கருமலைத் தமிழாழன்.
10. என்னவளே என்னுயிரே என்னில் கலந்தவளே
மன்னவனை மாய்ப்பதேன் மௌனத்தால் - என்னுதிரம்
நின்றொளிரும் நேயமிகு நித்திலமே நீள்மலரே
அன்பால் அணைப்பாயே ஆண்டு.
- கவிஞர் முகிலை பாஸ்ரீ.
11. மலரே மவுனம் மனத்தினில் ஏனோ?
மலர்ந்த நினைவை மதிப்பாய்க் - கலந்து
நிலவின் ஒளியாய் நிறைவாய் அகத்தில்
நலமாய் இசைந்தென்னில் நன்கு.
- கவிஞர்.தா. தமிழ் தங்கராஜ்.
12. காதல் கணைதனையே கண்ணால் விடுத்தவளே
மோதல் நமக்கில்லை மௌனமேன் - சாதல்
வழியின்றி நானும் விழிக்கின்றேன் பெண்ணே
பழியேது கண்டாய் பகர்.
- ந. முருகன்.
13. வாசனை வீசியே எண்ணத்தைச் சொல்வாயே
நேசமாய் பார்த்திடு நோக்கத்தைக் - கூசாது
வீசியதால் தாக்கிடும் போக்கால் தவிக்கிறேன்
வாசிக்க வந்தேனே பேசு.
- வேங்கடலட்சுமி ராமர்.
14. எனக்குள் இருந்தே எழுந்த உயிரே
உனக்குள் வளரும் உணர்வாம் - எனக்குள்
கனவாய் தினமும் கருவாய் மலரும்
மனத்தினைப் பூட்டுவது மேன்.
- நா. பாண்டியராஜா.
15. பாடுமென் வாய்மொழி பேடுகுயில் தான்சேர
வாடுமவள் நெஞ்சகத்தில் வாடையால் - கூடுகுயில்
தேகத்தைச் சீண்டிடவே தூவளைப் போன்றதொரு
பாகமாய் நாணியதே காண்.
- கனகசபாபதி செல்வநேசன், அல்வாய்.
16. மலர்களும் பூத்து மணமுந்தான் வீச
நிலவும் வரவும் நினைவில் - அலர்ந்து
விழுந்து கிடந்தாலோ வேதனை கூட்டும்
எழுந்து நடந்திட என்று.
- தஞ்சை கோ. பாலசுப்ரமணியன்.
17. அந்திமாலை நேரத்தில் ஆத்தோர நாமுந்தான்
சந்தித்த வேளையில் சந்தோச - செந்தமிழ்ச்
சிந்தை பரவிட செவ்வாய் திறந்துமே
சுந்தரியே மௌனம் கலை.
- முருகன் ஊர்க்காவலன்.
18. தேனின் இருப்பினைத் தேடுகின்ற வண்டினை
மானினது ஓட்டம் மலைத்திடும் - ஞானம்
மணமே பரப்பும் மலரும் மலர்கள்
குணமேதான் மௌனத்தைக் கூட்டு.
- பாக்கியலட்சுமி சத்தியநாராயணன்.
19. மலரது கொண்ட மணமே பரவ
நலமேதான் எங்கும் நயந்தே - குலமகளாய்
நாணமே கொண்டிடும் நாயகிதான் புன்முறுவல்
காணமல் ஏற்றுமௌனம் கொள்.
- வினோ பிரகாஸ்.
20. கண்ணுள் மணியாய் கலந்திட்ட காரிகையே
எண்ணில் அடங்காத எண்ணங்கள் - விண்மீது
வண்ணமாய் நெஞ்சில் வளைய
வருகிறதே
மண்ணுள் புதைவேன் மலர்.
- ரேணுபாலு.
21. வண்டு வருமாம் வழிமேல் விழிவைத்து
நின்றாள் மலரும் நெடுநாளாய் - வண்டுந்தான்
பக்கத்து பூவினில் பக்குவமாய்த் தேனுண்ண
துக்கத்தில் மூழ்கினாள் துன்பு.
- இந்திரகுமார் ஜமுனாமலர்.
22. மலரேநீ மௌனம் மலர்ந்து மகிழ்வாய்
அலரி மலரும் அழகில் - உலவும்
சிவனுக்குச் சூடும் சிவப்பு மலரே
புவனத்தில் பூத்திடும் பூ.
- அங்கயற்கண்ணி செல்வக்குமார்.
23. மலர்களின் மௌனமதில் மாலையும் மயங்கும்
மலர்ந்த சிரிப்பில் மகிழ்வே - புலரும்
பொழுதில் புதுமை புகுத்தும் மனத்தில்
விழுதாய் நலமே விளைந்து.
- சாத்தூர். கிருஷ்ணதாசன், கோவை.
24. மலரேநீ மௌனமா மாலையில் பேச
அலர்ந்திட தொல்லை அருந்தும் - பலனாய்
உலர்ந்திடும் முன்னே உரிமை மதுவும்
நலமாக சேர்ந்திட நாடு.
- குயில்.மு. இரசியா பேகம்.
25. சோலை மலரெல்லாம் சொந்தம தாகியே
காலை முதலே களிப்புடனே - வாலைக்
குமரிகள்போல் வந்தன கூட்டுச் சிரிப்பில்
குமரிநீயேன் மௌனமானாய்க் கூறு.
- செண்பக ஜெகதீசன்.
26. மலரேநீ மௌனம் மலர்ந்து மகிழ்வாய்
தலமதைத் தேடித் தனித்தே - உலவும்
கலகமும் இன்றிக் கனிவாக வாழ
விலகும் இருளும் விரைந்து.
- றூபா அன்ரன்.
27. கண்ணே கலைமானே காலைக் கதிரவனே
பெண்ணிற் சிறந்தவளே பேரழகே - பண்பின்
மருவு ருவேமலரே மௌனம் கலைத்தே
ஒருவார்த்தைக் கூறிடுவாய் ஓர்ந்து.
- செல்லமுத்து பெரியசாமி.
28. மாந்தளிர் மேனியே மாரன் மழையென
ஏந்திழை உன்னிடம் எண்ணங்கள் - ஏந்தியே
நீந்தும் மனமது நீரிடை மீனென
காந்தளே காதலைச் சொல்.
- கவிஞர் கேசவ தாஸ்.
29. அருவிக் கரையோரம் அந்திமாலை நேரம்
பருக அதரமது பாவம் - உருகியுந்தான்
நான்குடித்த போதினில் தேன்கொடுத்த தேகமதும்
ஊன்போன்றே ஆன உவப்பு.
- கவியோகி கருணாகரன்.
30. மலரேநீ மௌனமா மல்லிகை வெண்மை
சலனந்தான் ஏனோ சகிப்பில் - நிலவில்
இலையும் உதிர்த்தே இறக்கையும் கொண்டே
உலவுகின்ற தென்றல் உறவு.
- இராசையா கௌரிபாலா.
மலரே மௌனமா - 2
31. மலரே மவுனமா மென்மையாய்ப் பேசி(டு)
உலராத வார்த்தை உதிர்க்க - நிலமே
அதிரட்டும் உன்மொழி ஆழமாய்ப் போக
புதியதாய்ச் சொற்சிலம்பம் பூட்டு.
- மு.வா. பாலாஜி.
32. அந்திப் பொழுதில் அவளைநான் தேடிட
வந்தனம் செய்தே வரவேற்ற - நந்தவனம்
சாந்துடைய பொட்டழகி சந்தனம் பூசிய
மாந்தரிவள் மௌனமாய் மாண்பு.
- கு. மலர் செல்வி.
33. மலரது பேச மனமே மகிழ
கலக்கமும் வேண்டாம் கனியும் - உலர
பலரும் வருவாரே பாசமாய் வாழ
பலவாய்ப் பிறந்திடவே பார்.
- இரா.கி. இராமகிருஷ்ணன்.
34. காலைக் கதிரோனின் கண்கள் திறக்கவும்
மாலை வரையும் மலர்ந்தும்தான் -
சோலையில்
வாலைக் குமரியொடு கூடிக் களித்திட
வேலை தனிலே வியப்பு.
- அன்ரேன் றோமன்.
35. மரத்தினிற் பூக்கா மலரே அழகே
பிரமன் படைத்த பிணையே - மரகதமே
மெல்லிதழ் மூடி மொழியா திருப்பதேன்?
பல்லவியே மென்சொற் பகர்.
- த.கி. ஷர்மிதன்.
36. பெண்களின் கூந்தலுக்குப் பேரெழில் தந்திடும்
கண்ணைக் கவர்ந்திடும் காட்சியாம் - மண்ணில்
இறைவன் திருமுடியில் என்றும் உனக்குக்
குறைகள் இருக்குமா கூறு.
- ஆ.த. குணத்திலகம்.
37. மாதுறவு நெஞ்சம் மகிழ்வோடு தந்தவளும்
மாதுறவு தந்தே மறைந்திட்டாள் - யாதுறவும்
மாதுறவால் தீதுறவாய் மண்ணுலகில் ஆனதிங்கே
மாதுறவு வேண்டாம் மனம்.
- புதுவைத் தமிழ்நெஞ்சம்.
38. செந்நிற மேனி செழுமை மிகையெனச்
சுந்தர தாய்மொழியைச் சூழ்நிலையால் - அந்தமிலா
உந்துகின்ற கண்ணால் உவகை பொழிந்துமே
வந்தனை செய்வாயா சொல்.
- பிரபு ஐயாத்துரை.
39. நீரூற்றிக் காத்தனன் நீண்டநாள்
பூங்கொடியை
வேரிற்று வீழ்ந்திடாது வாஞ்சையுடன் - நேருற்றுச்
சீருற்றுச் செம்மையாய்ச் சார்ந்திட்டும் பூத்திடாது
மாறுற்ற மௌனமும் ஏன்?.
- வில்லவன் கோதை.
40. விழியாலே பேசி விருப்பத்தைக் காட்டும்
அழியாத காதலில் அன்னம் - விழியோர
அன்பும் விளங்குதே அங்கத்தில் ஏனிந்தப்
புன்னகை சிந்தினாய் பூ.
- தங்கை பாலா ஆசினி, சேந்தன்குடி.
41. காலைப் பொழுதினில் காற்றாய் மலர்ந்திடச்
சோலை தனிலுன் சுகவாசம் - சோலையில்
மாலை அணிந்தவர் மார்பும் நெகிழ்ந்திட
ஆலையில் மௌனமாய் ஆய்ந்து.
- பழனியாண்டி கனகராஜா.
42. என்னவளே என்னுயிரே எந்நாளும் என்னுள்ளில்
இன்பத்தின் ஊற்றாய் இருப்பவளே - உன்னை
புலரும் பொழுதெல்லாம் போற்றும் எனக்கும்
மலரே மவுனம்ஏன் மா.
- கவியழகன்.
43. மகத்துவம் பெற்றிட்ட மானிட ரெல்லாம்
அகத்துள்ளே உள்ளார் அடங்கி - இகத்தில்
நிலவிடும் சூழலோ நிதமும் கலையும்
மலரேஉன் மௌனத்தை மாற்று.
- முனைவர்.கா. இரசகுமாரன்.
44. இதழ்கள் விரித்தே இதமளித்த பூவின்
வதனத்தைக் காட்டியே வாட்ட - எதனால்
மதமாய்க் களிறாய் மயங்கிக் கிடக்க
பதமாகச் சொல்வாய் பதில்.
- நா. அருண் பிரசாத், திருச்சி.
45. சித்திரமே எந்தனின் சிந்தையாய் நிற்பவளே
நித்திலமே எந்தன் நினைவெலாம் - முத்தாய்ப்
பதிந்தவளே என்பால் பரிவுடனே ஆசை
யுதித்திடக் காதலைக் கூறு.
- கவிஞர். கேசவ தாஸ்.
46. உள்ளோடும் எண்ணம் உரைக்காமல் போகாதே
கள்வடியும் பூக்கள் கதவடைத்தால் - துள்ளிவரும்
சில்வண்டு வாடுமே சிந்திப்பாய் என்னவளே
நல்வாக்கை இன்றேனும் நல்கு.
- மீனா கோபி.
47. நந்தவன பூக்கள் நறுமணத்தைக் கொண்டுநிதம்
வந்தவள் என்னுடைய வஞ்சியாய் - சந்தனம்
சிந்திட மௌனமே பூவாய்
மிளிர்ந்திட்ட
அந்தளமாய் வெட்கம் அணி.
- தமிழூராள் அனுஷ்திக்கா.
48. கங்கை நதியாய் கடவுளாய் காக்கிறாய்
மங்கை மனத்தில் மவுனமேன் - நங்கையே
துங்கை நதியாய் தொடர்ந்தே அளித்திடும்
தங்கை தளராது தா.
- கண்ணன் நடராஜன்.
49. வண்ண மலரே வருந்தாதே வீணிலே
எண்ணமே நீயடி என்னவளே - கண்ணாலே
சொல்லடி காதலைச் சோகம் விலகிடும்
இல்லறம் சீராம் இனிது.
- எம்.ஐ.எம். அஷ்ரப்.
50. மலரே மனத்தால் மரணத் துளியின்
அலராத காலையின்பை அள்ளி - உலவும்
நிலவுந்தான் தந்திட்ட நித்தியத் தீபம்
உலராத உள்ளத்தின் ஊற்று.
- நகுலா சிவநாதன்.
52. காலைப் பனிகூட காதலில் வீழ்ந்ததோ
வாலைக் குமரியுன் வாசனையால் - வேலையில்
மாலைப் பொழுதுகள் மாசிலாப் பாங்கினில்
சோலை மலரெனது சொத்து.
- இந்திராணிதங்கவேல்.
53. அன்பும் இனித்தும் ஒருமித்தும் ஈருயிர்
பன்முக நெஞ்சம் பகிர்ந்திட - இன்பம்
பலவாகி, துன்பமே பின்னிய ஊடல்
மலரேநீ மௌனமா சொல்.
- இரா மீனாட்சி சுந்தரம், கோவை.
54. நாடு வளம்பெறும் நன்னெய் தரும்பூவால்
வீடு மணமேற்கும் வெண்பூவால் - ஆடுமலர்
கூடுமந்த வண்டுகள் மௌனம் கலைத்திடும்
ஏடும் உரைக்குமதன் இன்பு.
- கலாராஜன்.
55. ஒட்டிய தொற்றினை ஓட்டி விரட்டியே
கொட்டிய செந்தேள் மருண்டுனை - விட்டிட
ஈட்டிய தேட்டையும் வெண்டிரை வீழுமுன்
வாட்டிய மௌனம் உடை.
- இராம.அழ. கார்த்திகேயன், மதுரை.
56. மலரேநீ உன்றனின் மௌனம் தொடர்ந்தால்
பலவீனம் கொள்ளுமே பெண்மை - பலமாய்
எழுந்திட பாய்ந்திட என்று முமக்கு
விழுந்திடுமே வெற்றியின் வித்து.
- வ. இராமதாஸ், திண்டிவனம்.
Comments
Post a Comment