நேரிசை வெண்பாக்கள் (மு.இரசியா பேகம்)
நேரிசை வெண்பா பாடல்கள்
கடவுள் வாழ்த்து
*********************
சந்தச் சுவையுடன் சங்கத் தமிழையே/
தந்தாய் இறையே தரமாக-எந்நாளும்/
சிந்தும் தமிழைச் சுகந்த மழையாக/
அந்தம் வரைநீயே ஆக்கு!/
2.வான் சிறப்பு
*****************
கருமுகில் மோகித்துக் கட்டியதோர் காதல்/
பெருமுகில் தாகம் பெருகும்-திருவாய்த்/
தெருவெல்லாம் வெள்ளம் திரளப் புரள/
வருகின்ற வான்மழையே வா/
3.இயற்கை நேசிப்போம்
************************
நில்லாது தென்றல் நிசமாக நீவிவிட/
பொல்லாக் குயில்கூவிப் பாடுமே-பல்விதமாய்க்/
கல்லும் கடுமை கடந்திடச் சொல்லியே/
வெல்க விரும்பிய வாழ்வு./
4.அன்பினால் ஆள்வாய்
***************************
தன்னலம் இல்லாமல் தந்திட அன்பாகும்/
நன்னலமாய் நிற்கும் நிலைத்துலகில்-உன்னதமாய்ப்/
பின்பும் உயிர்ப்பில் பெருகும் பெருந்தனமே/
அன்பை புவனமாய் ஆக்கு./
5.நட்பின் இலக்கணம்
*************************
இணக்கம் அறிந்தால் இணங்கும் இதயம்/
பிணக்கா திருக்கப் பெறுக-குணத்தைக்/
கணக்கை அகற்றிக் கனிந்த இதயம்/
சுணக்கம் அகற்றச் சுகம்./
6.மரங்கள் நடுவாய்
**********************
மரங்கள் நடுவாய் மருகே தெருவில்/
உரமாம் இலைகள் உணர்ந்து-மரமாய்/
வரமாகும் மண்ணில் வளிவெளி காற்றில்/
தரமாய் உயிர்வளி தந்து./
7.வெல்வாய் உலகை
***********************
வெல்வாய் உலகை விரைந்து முயன்றுநற் /
கல்வி கசடற கற்றபின்-வல்லவராய்ச்/
செல்லுமிட மெல்லாம் சிறப்பாகச் சேர்ந்திடுமே/
நல்லவர் நட்பினை நாடு!/
✍✍✍
ஆக்கம்
குயில் மு இரசியா பேகம்
அருமை அருமை
ReplyDelete