கவிகளில் பூப்போம் (நேரிசை வெண்பாக்கள்)

 
















        




கவிகளில் பூப்போம் 

(நேரிசை வெண்பாக்கள்)


1. விடுதலை தந்திடும் வீறுடைய மாந்தர்

தொடுத்திடும் ஆய்தம்தாம் நம்மின் - அடுத்த

கெடுதல் அழித்திட கொள்கையை ஏந்தி

எடுக்க விரைந்து எழு.


- புதுவைத் தமிழ்நெஞ்சன்


2. புதுப்பூ வெழில்தான் புனைவோம் கவிதான்

மதுவினைக் கொண்ட மலர்தான் - புதுமுகம்

நாங்கள் மரபில் நனிதமிழ்ப் பாட்டெழுதி

பாங்காய்ப் படிக்கும் பதிவு.


- தனராஜ் பாப்பணன், கோவை.


3. சிந்தையில் தோன்றும் சிறந்தக் கருத்துதனை 

விந்தை எனவே விளம்பு - கந்தையில் 

உள்ளம் சிதைந்தே உலவும் மனத்திலே 

கள்ளம் இருக்குமோ காண். 


- ந. முருகன்.


4. கன்னித் தமிழைக் கவினுறக் கற்றிட 

என்றும் புனைவோம் இனிமையாய் – கன்னலின் 

இன்பம் கவிகளில் ஏற்றிடக் காவியம்

மன்றினில் பூத்திடு மே.


- மஞ்சுளா ரமேஷ்.


5. புவியில் புலமை புகழாய்த் திகழ

சிவிகையில் நாளும் சிறப்பாய் − கவியால்

கவினுற இன்பம் கவிஞர் தழுவ

கவிகளில் பூப்போம் களித்து.


- தா. தமிழ் தங்கராஜ்.


6. நேரத்தை வீணாக்கி நிம்மதியைத் தூரமாக்கி

பாரஞ் சுமக்காதே பாடியும் - தாரணியில் 

நற்றமிழ்ப் பாக்களை நன்றா யியற்றியே

கற்கத் தருவோம் கவி.


- எம்.ஆர். ஜெயந்தி.


7. கன்னி மனமும் கவியாகப் பூத்திட

மின்னல்தான் எம்மருங்கும் மின்னவே - கன்னலாய்

காதல் கலந்திடும் காமந்தான் கொண்டிட

மோதலும் இல்லாக் கவி.


- வினோ பிரகாஸ்.


8. உள்ளத்துச் சிந்தனையை ஒப்பிலாத் தாய்மொழியில்  

துள்ளிடும் உன்னெழுத்தில் தோரணமாய் - அள்ளிவரக்

கொள்ளைகொள்ளு மென்னுள்ளம் கோடியின்பம் தான்காணும்

கள்ளிலும் பாலுண்டு காண். 


- மணி தியாகேஸ்.


9. பல்வண்ணப் பூவாம் புனைந்த புதுக்கவிதை 

நல்வண்ணம் தீட்டிட நல்கிய - வல்லதொரு 

கல்வண்ணச் சிற்பம் கலைமிளிரும் நாட்டியம் 

பல்கிக் கமழ்ந்திடும் பார்.


- இரா மீனாட்சி சுந்தரம், கோவை.


10. அதிசயப் பாட்டில் அமைந்தது யாவும்

துதிபட உள்ள பதிவு - அதிலே 

விதிகள் அமைத்து வழிமுறை காட்டி

பதிவுற நிற்கும் தமிழ்.


- சரஸ்வதிராசேந்திரன்.


11. செற்ற லுடனே செழுமையும் கூடிடவே

பொற்புடன் இன்னிசைத்து பொற்குடம் - ஊற்றிடுவோம்

நற்றமிழ்க் காவியங்கள் நாவினிலே முத்தெடுக்க

கற்றுத்தான் பூத்திடுவோம் காண்.


- ஜெ. வசந்தி, பளை.


12. உள்ளக் கிடக்கையை உண்மையாய்ச் சொல்லிடும்

துள்ளும் மனத்தை அழகழகா(ய்) - அள்ளும்

கவியினில் பூக்க மொழியினை ஊற்றுப்

புவியை எழுத்தால் புனை.


- மு.வா.பாலாஜி.


13. காலங்கள் உள்ளவரை காத்திடுவோம் முத்தமிழைக்

காலக் கவிதைகள் கற்பிப்போம் - ஞாலத்தில்

பாவங்கள் நீக்கியே பரவசம் கொள்ளவே

ஆவலாய் கற்றுக்கொள் நன்று.


- ம. பழனிச்சாமி.


14. ஆண்மயிலாம் தூவலின் ஆசையும் கூடிடவே

பெண்மயிலாம் காகிதமும் பெற்றெடுத்தாள் - தண்ணீரில்

தண்டுயர்ந்து மொட்டவிழும் தாமரையாய் என்னுள்ளே

எண்ணத்தில் பூத்திடுமே எண்ணு.

              

- தமிழுறவன், கருவூர்.


15. அகிலங்கள் போற்ற அனைவர் விரும்ப

மகிமைகள் பெற்று மகத்தாய் - மகிழ்வாய்

உலகில் கவிகொடுப்போம் உண்மை நிலைக்க 

நலன்கள் நினைத்திடா நன்று.


- பிரபு ஐயாத்துரை.


16. வண்ண மலராக வார்த்தைத்  தொடுத்திட்டேன் 

எண்ணிடும் கற்பனையில் என்றென்றும் - திண்ணமாய்   

கண்ணின் இமையாய் கவிதை வடித்திட்டேன் 

மண்ணின் பெருமை மலர்ந்து.


- கோ. பாலசுப்ரமணியன்.


17. தமிழே அழகாம் தழுவிட நன்றாம் 

அமிழ்தே இனிதாம் அறிவாய் - தமிழை

மனமே உருகி மகிழ்ந்திட நாளும்

தினமுந்தான் போற்றி மகிழ்.!


- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.


18. பூக்கள் விரிந்து புலரும் புதினமாய்

பாக்கள் தரமாய்ப் புனைந்திட - நோக்கமாய்

வாக்கில் அமைப்பதற்கு வாய்மை தகிப்பதற்(கு)

ஆக்கம் அணியாய் அமைத்து.


- குயில்மு இரசியா பேகம்.


19. இயற்கை யழித்திட்டே இவ்வுலகம் எங்கும்

செயற்கைகள் சேர்ந்திடச் செய்தால் - வயல்கள்

பயக்குமோ பாரெங்கும் பன்மலர் பூத்துத்

தயங்கா தளிக்குமோ தார்.


- கண்ணன் நடராஜன்.


20. கொங்கும் மலரும் குவளை இரவது 

தங்கிட நீரும் துளியாகும் - மங்கா 

விடியல் எழும்பும் வடியல் தொடங்கும் 

வடிநீர் மறைவாய் விரை.


- இரா.பாலா, சென்னை.



21. காலம் கடக்குமுன் காவியம் யாத்திடு

ஞாலம் வளைத்திடும் ஞாயிறென - பாலம்

புதியதை வார்த்திடு பூபாளம் பாடு

நதியினில் நீரென நீ.


- வேங்கடலட்சுமி ராமர்.


22. உள்ளத்து நல்இருப்பை உள்ளபடி  தானுரைத்துத்

தெள்ளத் தெளிந்தும்தான் தேமதுர - கள்ளமில்லாப் 

பிள்ளைத் தமிழோடு பாடுகவி யாத்திட

பள்ளி எழுந்தன புள்.


- கனகசபாபதி செல்வநேசன், அல்வாய்.


23. பாவில் பலதைப் படித்தநன் மாந்தர்கள்

நாவினில் சந்தமும் நாளுந்தான் - தாவிடவே 

தூவிய பாக்கள் தொடராகக் கற்றேதான்

தாமினிச் செப்புவோம் தான்.


- வதிரி சி. ரவீந்திரன்.


24. பாக்கள் தொடுத்தேதான் பாதை அமைத்திடுவோம்

பூக்களாய் நாளும்நாம் பூமியில் - பூக்கும்

கருத்தில் உருவாய் கருவை வடிப்போம்

தருவோமே நாளும் சிறந்து.


- கவிஞர் முத்து. பரமசிவம்.


25. தமிழை வளர்த்திடுவோம் தாரணி போற்றிட

சேமித்துக் காத்திடுவோம் சேர்ந்தே - குமிழ்போல்

அமிழ்தாய் பருகி அகிலம் பரப்ப

கமிழும் மனதைக் கவர்ந்து.


- இரா.கி. இராமகிருஷ்ணன்.


26. கவிமலர் பூத்துக் கடிமணஞ் சூழ்ந்து

செவிகளி லின்பமே சேரப் - புவியிற்

குவிந்துளச் சொற்களைக் கூட்டி எடுத்துக்

கவிகள் படைப்போமே காண்.


- செல்வராஜா சுதாகரன்.


27. வெண்பா எழுதும் விதியை அறிந்திட

நண்பா தினமும்நீ நூலினைப் - பண்புடன்

கண்டு நயமும் கவர்ந்து தெளிந்திட

செண்டாய் கவியைச் செதுக்கு.


- நா. மூதூரான்.


28. தமிழ்மொழி எம்மவர் தாய்மொழி யன்றோ 

அமிழ்தாய் இனியதாம் அஃதே - துமியும் 

பிறமொழிக ளில்லாது பேரும் தமிழில் 

கறந்திடுவோ மென்றும் கவி.


- ஆ.த. குணத்திலகம்.


29. நற்றமிழ்த் தாய்மொழியால் நாவாரப் பாடியும் 

முற்றமிழால் மூவுலகும் முத்தாய்ப்பாய் - கற்றிட்ட 

பெற்ற அறிவாலே பேறுகள் பெற்றும்தான் 

சுற்றம் சிறந்திட பூத்து.


- நகுலா சிவநாதன்.


30. பள்ளியில் கற்ற பொருளினை  ஏற்றிடுவோம் 

தெள்ளிய நீதி தெளித்திட - உள்ளத்தில்  

அள்ளும் கருவை அமுதாக ஊட்டவே 

வள்ளியோன் வந்தால் வரம்.


- த யாசகன்.


31. எதுகையும் மோனையும் எண்ணத்தில் ஏற்றி

புதுமையும் கற்பனையும் பூத்துத் - ததும்ப

புவிதனைக் காப்போம் புகழ்தனைச் சேர்ப்போம்

கவிகளில் பூப்போம் களி.


- பொன்னம்பலவாணன்


32. பாரதி நல்கிய பாக்கள் தமிழினில் 

பாரினில் பாட்டனின் பாடலாம் - சீரிளமை 

பாக்கள் வடித்தே பசுமை நினைவினை 

பூக்கும் கவிதையாய் பூ. 


- இந்திராணிதங்கவேல்.


33. கற்பனை பூக்க கவிதைகள் ஊற்றெடுக்கும்

விற்பனை செய்ய விலைபேச - கற்றிட்ட

சொற்பனை கொண்டுநாம் சொற்கள் கொடுத்திடுவோம்

அற்பனும் பற்றிடுவா னாங்கு.


- ரேணு பாலு.


34. கருவை அளித்துக் கவிதை இயற்றித்

திருவை அடைய தினமும் - குருவாக 

நின்றுதுணை செய்ய நடுவரை வேண்டுகின்றேன்

என்றும் கவிதை எனக்கு.


- தனம் மீனாட்சிநாதன்.


35. சிந்தையிலே தோன்றிடும் சிந்தனையைச் செம்மையாக்கி                                                                                                                   செந்தமிழ்ப் பாக்களாய்ச் செய்குவோம் – முந்தையோர்                                                                                                  கற்பித்த நல்ல கருத்துகளைச் சொல்லிடுவோம்                                                                                                               கற்பனை கொஞ்சம் கலந்து.


- செல்லமுத்து பெரியசாமி.


36. நெற்றிக்கண் கண்டும் நிலைதவறி வீழ்ந்திடாமல்

பற்றுடன் நக்கீரன் பாதுகாத்த - பொற்றமிழில்

பாவாய் இசைக்கும் பாவலனின் வாய்மொழிக்கு

காவலனும் காட்டுவான் கண்.


- அலியார்.


37. கவிமலர் சேர்த்துக் கவினுற நாளுங்

கவியாரம் நற்றமிழிற் கட்டிப் - புவியிற்

பழுதற மக்களும் பண்புடன் வாழ

வழுவில்லாத் தூக்கு வழங்கு.


- த.கி.ஷர்மிதன்.


38. மழலை மொழியில் மயங்கும் மனத்தில் 

குழலும் இனிதெனக் கூறல் - அழகோ 

கழலணி தெய்வ கவியில் மகிழ்ந்து 

பழந்தமிழ்ப் பண்பினைப் பார்.


- ஆனந்த் சுந்தரராமன்.


39. கவிதைகளின் இன்பம் கருத்தால் மொழிதல்

செவிகளின் இன்பந்தான் செப்பும் - கவிதனில்

உண்மையே எங்கும் உயர்வாக நிற்கவே

உண்டாக்கும் பாவில் உலகு.


- க. விஜயபாஸ்கர்.


40. செந்தமிழ்ச் சீரருவி சிந்தை நிறைந்திட

செந்நிற சோலை செழிப்புற - அந்தமிலாச் 

சந்தங்கள் ஓங்கி சரித்திரம் கண்டிட 

சொந்தமாய் பாக்களின் சொத்து.


- விஷ்வசீதா அட்சரநாதன்.



Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)