ஆண்டவனைத் தொழுவோம் (நேரிசை வெண்பாக்கள்)

 
ஆண்டவனைத் தொழுவோம் :

(நேரிசை வெண்பாக்கள்)


1. அன்பே உலகத்தின் ஆண்டவன் என்பதை /

அன்றே உரைத்தனர் ஆன்றோர்கள் - நன்றிதை /

இன்றே உணர்வாய் இனிதாக வாழ்ந்திட /

நன்றே நடந்திடும் நம்பு./

- முகிலை பாஸ்ரீ.


2. உயிரும் உறவும் உலகில் உயர்வு /

பயிரும்  கதிரும்  உறவாம் -உயிராம் /

இயற்கை சிறக்க இனிமேல் செழிக்க / 

இயல்பாய்த் தொழுவாய் இறை./

- பொன்னம்பலவாணன்.


3. மறையு மவலம் மலரு மருளும்/

குறையு மகன்று குருடும் - நிறைந்த/

பழுதும் பணியும் பகடும் பெருகும்/ 

வழுவா திறையை வழுத்து./

- த.கி.ஷர்மிதன்.


4. இடர்கள் களைந்திங்(கு)  கினியவை மல்கத்/

தொடரும்  பிணியினித் தொல்லை - கடந்து/ 

தடங்கள் பதிக்கத் தரணி செழிக்க/

சுடரா லணைத்திடு தொற்று./    

- மணி தியாகேஸ், இலங்கை.


5. முருகா  மருகா முழுமுதற் தேவா/

வருவாய் தருவாய் வளமும் -அருள்வாய்/

கருணை புரிவாய் கலியுக மைந்தா/

இருளைக் களைவாய் விரைந்து./

- காரைக்குடி கிருஷ்ணா.


6. அலைகடல்  மேலே அமர்ந்த இறையே/ 

கலைமகள் நீயே கருத்தாய் - கலையே/

விலையது பேசிடா வித்தையைக் கற்றேன்/ 

சிலையும்  வடித்து  சிற./

- வாசன் சாவி.


7. அன்பேதான் தெய்வம் அருள்கின்ற தாயேநீ /

இன்றேநாம் போற்றி இதயத்தில் - பொன்போலே/

நன்றேநாம் செய்ய நலமிகு நன்மையை/ 

என்றும் எழிலான ஏற்று ./

- நகுலா சிவநாதன்.


8. நீண்ட அறிவுடையான் நெஞ்சில் மறந்திடாது/ 

வேண்டி வழிபடுவோம் வீழ்ந்துமே - ஆண்டுமே/ 

மாண்டுமே போயினும் மண்ணில் நிலைத்திருக்க/

யாண்டுமே ஈகையும் செய்./

- வில்லவன் கோதை, அண்ணாமலைப்புதூர்.


9. அழித்திடுவாய் நுண்ணுயிரை ஆண்டவனே மண்ணில்/

விழிகளை வாட்டும் வினையின் - அழிவும்/

மறைந்திட வேண்டும்    மனிதனி லின்றே/

இறைவா அருள்வாய் இரங்கு./

- ஜெ.வசந்தி, இலங்கை.


10. மண்ணில் கொரோனா மடிந்ததுப் போகவும்/

எண்ணிடும் எண்ணங்கள் ஏற்றமாகி − பண்ணியப்/ 

புண்ணியம் கூவில்  புலரத் தொழுவோமே/ 

ஆண்டவனை நாளும் அணைத்து./

- தா. தமிழ் தங்கராஜ்.


11. தொல்லை கொடுக்கின்ற தொற்றினைப் போக்கியும்/ 

அல்லவை நீங்க அகமகிழ்ந்தும்  - நல்வாழ்வை/ 

எல்லோரும் பெற்று யதார்த்தம் நிலைக்குமாற/ 

இல்லம் தொழுவோம் இயைந்து./

- மாலதி திரு.


12. அண்டமெல்லாம் காட்சிதரும் ஆலகண்ட ஈசனே/

கண்டத்தில் தாங்கியெமைக் காத்திடும் - நண்பனே/

உண்டவிடம் தானோங்கி  ஊணுடம்பு சோருமுன்/

பிண்டத்தில் நீக்கு  பிணி./

- பழனியாண்டி கனகராஜா, இலங்கை.


13. ஆண்டவனைக் கைதொழவே அன்னியமா யாகிடுமே/

வேண்டுவோம் இன்பம் விரைவாக - காண்போம்நாம்/

சேர்ந்து புகழுந்தான் சேர்ந்திடு முன்வாழ்வில்/

ஓர்ந்து தினம்நீ ஒழுகு./

 - செல்லமுத்து பெரியசாமி.


14. மண்ணில் உயிர்களும் மாய கொரோனாவால்/

எண்ணில்லா மக்களின் ஏற்றமிகு - எண்ணத்தால்/

ஆண்டவனின் நற்கிருபை அன்பும் கிடைத்திட/

வேண்டுவோம் போற்றும் வியந்து./

- பரமராஜ்.


15. கூற்றும் குணமும் குறையாத நன்மைகள்/

போற்றும் மனிதம் பொலிந்திட - தூற்றாத/

மாற்றம் எழுந்தே மனத்தில் புகுந்திட/

ஏற்றந்தான் காண எழு./

- மாதனூர் ஜெயராமன்.


16. நெஞ்சு கொதிக்கிறது நேர்வருவாய் அம்பிகையே/

அஞ்சுகிறோம் தொற்றை அடக்கியாள் - மிஞ்சிடும்/

நஞ்சாய்ப் பரவாமல் நற்றுணையாய் நின்றிடுவாய்/ 

தஞ்சமருள் தாயே சரண்./

- சரஸ்வதி ராசேந்திரன்.


17. தீயாய்ப் பரவுகின்ற தீநுண்மி நோயது/

போயகல வென்றும் பொறுப்புடன் - ஓயாது/

ஆண்டவன் தன்னை அனுதினமும் போற்றியே/

மாண்பைப் பெறுவோம் மகிழ்ந்து./

- செல்வராஜா சுதாகரன்.


18. தொற்றுநோயும் நாளும் தொடரும் மனிதனில்/ 

பற்றுதனைக் கொண்டு பரப்புதே  - இற்றைக்குப்/  

பெற்ற மனத்தில் பெருகுதே துன்பமுந்தான்/ 

கற்றவரும் காணலையே காண்./

- கோ. பாலசுப்பிரமணியன்.


19. இன்னல் உலகத்தில் இன்றியும் வாழ்ந்திட/

அன்பே உருவான ஆண்டவனை - நன்றென/

இன்றே தொழுவாய் இனிதாகப் போற்றியும்/

நன்றே பெருகிடும் நன்று./

- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.


20. உலகத்தை யிப்போ துலுக்கும் கொரோனா/ 

இலகுவி லெம்மைவிட் டேகா - புலமே/

கலங்காதே யென்றுமெமைக் காத்திட வேண்டி/ 

நலமோ டிறைவனை நாடு./

- த. குணத்திலகம்.


21. கன்னல் மொழியான கன்னித் தமிழினால்/

சன்னல் வழியாக தென்னீசன் - என்றென்றும்/

மின்னலாய் தோன்றி மறைகின்றான் போற்றியே/

நன்னெறி வாழ்வினை நாடு./

- சாக்கை.பொன்னழகு.


22. ஆண்டவனை வேண்டிநாம் ஆலயம் சென்றுந்தான்/

நீண்டதொரு இன்ப நிலையினைத் - தூண்ட/

துலங்கு மொளியினில் தூய மறையும்/

இலங்கு மருளின் இறை./

- கலா கணேசன்.


23. மருந்தில்லா நோயாலே மக்க ளவதி/

அருள்வாயே ஆண்டவனே அச்சம் - கருதி/

திருநாமத் தைத்தேடி திக்கெட்டும் நாடி/

திருநாட்டில் நாங்கள் தவிப்பு./

- பி.ச.கோபால்குமார்.


24. துன்பம் விலகி தொலைந்து மறையவே/

இன்பம் பெருகி இனிதுவாழ - என்றும்/ 

இழிவான எண்ணமது இல்லாமல் போக/

வழிதேடி ஆண்டவனை வேண்டு./

- ந.முருகன்.


25. தெய்வம் தொழுதிட தேனாகும் நம்வாழ்வும்/ 

உய்த்திடும் நல்வரம் ஊக்கத்தை - எய்திட/ 

மாசற்ற உள்ளத்தை மாண்புடன் தந்திடும்/ 

நேசமாய் வாழ்ந்திடுவோம் நேர்ந்து./

- மஞ்சுளா ரமேஷ்.


26. ஆண்டவனை வேண்டுவோம் அண்டத்தைக் காக்கவே/

மாண்டது போதும் மனிதர்கள் - யாண்டுமினிக்/ 

காண்பவர் எல்லோரும் காப்பாற்ற வேண்டும்நாம்/ 

தோண்டும் சவக்குழியைத் தாண்டு./

- பிரபு ஐயாத்துரை.


27. தினங்கள் மறந்திட தீண்டல் துறந்தோம்/ 

மனத்தில் தயக்கமும் மாற - இனமாய்/

இணக்கம் இழந்தும் இறையை மறந்தோம்/

கணக்கினைத் தீர்க்கவே காண்./

- திருமலை கேஷிஹன்.


28. நெஞ்சம் முழுதும் நிறைத்த இறைவனே/

வஞ்சியே பாட விரைந்துவா - துஞ்சாது/

பஞ்சமும் நோயும் பறந்திட வேண்டினோம்/

தஞ்சம் தருவாய் திரு./

- மு. இரசியா பேகம்.


29. காண்பவை எல்லாமும் கானலாய் மாறிட/ 

ஆண்டவன் எங்கும் அகத்தினில் - மாண்புடன்/

பெண்மையும் என்றும் பெருமைதான்  கொண்டிட/ 

பண்போடு வேண்டித் தொழு./

- வினோ பிரகாஸ்.


30. புற்றீச லாகவே பல்கிப் பெருகிட/

கற்றீசன் தன்னைக் கனிந்துநாம் - நற்றீசன்/

நற்சேவை நல்கிட நற்தவம் நாடிட/

பற்றற்ற ஈசனைப் பற்று./

 - இரா மீனாட்சி சுந்தரம்.


31. இன்னலைக் கண்டே இடிந்த இதயமோ/

தன்னிலை தன்னால்  தவித்திட - அன்பினால்/

கன்னல் மொழியால் கரைந்து தொழுதிட/

நன்னிலை நல்குமே நாள்./

- ஆனந்த் சுந்தரராமன்.


32. ஆண்டவனை அன்புடன் அன்றாடம் வாழ்த்தியே/

மாண்டவரை போற்றிடு மாண்புடன் - நீண்ட/

நிலவுலகில் நீள்நேரம் நின்றவன் காக்க/

குலமுந்தான் கிட்டலையே கூறு./

- கண்ணன் நடராஜன்


33. அன்பே அகிலத்தை ஆளும் அறிவாக/

பன்முறை பண்பும் பகிர்ந்திட - என்றும்/

மனமும் மகிழும் மலரும் தெளிவாய்/

கனமேனும் ஆண்டவனைக் காண்./

- மகேஸ்வரி கிருஷ்ணசாமி.


34. மண்ணிலே வாழும் மனிதரே கேட்டிடுவாய்/

விண்ணிலே தேடினால் வீணாகும் - மண்ணிலே/

கண்முன் உதவும் கடவுளைக் கண்டிடுவாய்/

கண்டுடனே கூப்பிடுவாய் காப்பு./

  - தமிழுறவன்.


35. தீக்கிருமி பாரெங்கும் தீண்டிய கோரமிது/

காக்க வருவாய் கனிவுடன் - ஏக்கமுடன்/

வேண்டு முயிர்களின் வேதனை கேளாயோ/

ஆண்டவனே வந்துநீ ஆற்று./

- ஓசூர் மணிமேகலை.


36. அகந்தை உணர்வா லனைத்தையும்  வீழ்த்தி/ 

முகத்தை மறைத்து முடங்கி - அகத்தில்/

அடைபட்(டு) உழலுமெமை அன்பாய் பொறுத்தே/

விடைகொடு நோய்க்கு விரைந்து./

- எம்.ஆர். ஜெயந்தி.


37. மனிதத்தைப் போற்றும் மனிதம் வளர்ப்பாய்/

புனிதம் இதுவெனல் பொய்யே - கனிந்து/

மனிதத்தைப் போற்றுவோர் மாண்புகள் வாழ்த்தி(டு)/

இனிய மனத்துடன் இன்று./


- வெங்கடாசலம் இராமசாமி.


38. நல்லவை நிம்மதியை நாளும் பெருக்கிடவே

அல்லலும் நீங்கிட அன்புள்ளம் - தொல்லுலகில்

தொல்லை யடங்கித் தொடர்ந்திட வாராயோ

வல்ல இறையேநீ வந்து.

- அன்ரன் றோமன்.


39. உள்ள முருகி உளமார வேண்டுகிறோம்/

கொள்ளைக் கொரோனாவைக் கொன்றழிக்க - துள்ளும்/

மகிழ்ச்சி நிறையட்டும் மண்ணில் நமக்கு/

சகிக்காமல் ஆண்டவனைச் சாற்று./

- மு.வா.பாலாஜி.


40. ஆண்டின்று சார்வாரி ஆனந்தச் சித்திரையில்/

ஆண்டவன் பாத அடியினை - வேண்டுவோம்/

நீண்ட புகழும் நிலைத்திட காலமும்/

தூண்டவே தெய்வம் துணை./

- யதன் கணேஸ்.


41. இன்பமாய் நாளும் இறையடி சேர்ந்திட/

துன்பம் அழிந்திடும் தூய்மையும் - நின்றிடும்/

என்றும் இனிப்பாய் இறைவனை நாடிட/

அன்பும் பெருகும் அழகு./

- இர. அரவிந்த் கார்த்திக்.


42. தொழுதல் ஒருவர்க்குத் தொல்லை விரட்டும்/

அழுகை மனத்தி லமைதி - பழுதிலா/

வாழ்வினுக் கென்றும் வளம்கூட்டும்; ஆதலினால்/

தாழ்விலா தோங்கும் தலை./

- தனராஜ் பாப்பணன் 


43. மண்ணுலகில் வாழ்ந்து மடியும் உயிரெல்லாம்/ 

விண்ணுலகம் சேரும் விரைந்தேதான் -  வண்ணமாகப்/

பண்ணில் உருகிநாம் பாடக் கழல்பணிந்து/

கண்ணில் இறையினைக் காண்./

- த.யாசகன்.



......நன்றி....

Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)