1.மோனை என்றால் என்ன (அகன்)

 

மோனை என்றால் என்ன…?

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡


உரைநடைக்கும், கவிதைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.


உரைநடையிலிருந்து கவிதையை வேறு படுத்துவது அதன் சொல்லழகும், கட்டமைப்பும், ஓசை நயமும் தான்.


சொல்லழகு #சீரமைப்பினாலும், கட்டமைப்பு #தளைகளினாலும், ஓசை நயம் #தொடைகளினாலும் சீர் பெருகின்றன.


ஒரு பாடல் #அழகு_பெறுவது அந்தப் பாடலில் பயின்று வரும் #தொடைகளினால்_தான்.


தொடை இல்லாமல் இலக்கணச் சுத்தமான பாடல்களில் #அழகியலைக் காண முடியாது.


கவிதைகளின் ஓசை நயத்துக்கான தொடை எட்டு வகைப் படும். அவை,


01. மோனைத் தொடை,


02. எதுகைத் தொடை,


03. இயைபுத் தொடை,


04. அளபெடைத் தொடை,


05. முரண் தொடை,


06. இரட்டைத் தொடை,


07. அந்தாதித் தொடை மற்றும்


08. செந்தொடை ஆகியனவாகும்.


இவை எட்டையும் #முதல்_தொடைகள் என்னும் பெயரால் சுட்டுவர்.


இவை ஒரு கவிதையில் அமைந்திருந்தால் வெவ்வேறு வகையான ஓசை நயம் பெற்று கேட்போருக்கு இனிமை தரும்.


மேலும், அந்தக் கவிதை ஒருவர் சிந்தையைக்

கவர்ந்து எளிதில் மனத்தில் நிற்கும்படி அமையும்.


இவற்றில் முதன்மையானது #மோனை_ஆகும்.


#மோனை.

- - - - - - - - - -

#மோனை_இரண்டு_வகைப்_படும்.


அவை,


01. #இயல்பு_மோனை_மற்றும்


02. #இன_மோனை_எனப்_படும்.


01. #இயல்பு_மோனை.


ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல் #இயல்பு_மோனை_ஆகும்.


உ - ம்:

- - - - - - -

அ - வுக்கு அ - வும்,


ஆ - வுக்கு ஆ - வும்,


இ - க்கு இ - யும்,


ஈ - க்கு ஈ - யும்,


உ - வுக்கு உ - வும்,


ஊ - வுக்கு ஊ - வும்.


எ -வுக்கு எ - வும்,


ஏ - வுக்கு ஏ - யும்,


ஐ - க்கு ஐ - யும்,


ஒ - வுக்கு ஒ - வும்,


ஓ - வுக்கு ஓ - வும் மற்றும்


ஒள - வுக்கு ஒள - வும்


என 12 உயிர் எழுத்துகளுக்கும் 

#இயல்பாக_மோனை_பெறும்.


அவ்வண்ணமே உயிர் மெய்யெழுத்துகளுக்கும்


க - வுக்கு க - வும்,


கா - வுக்கு கா - வும்


ச - வுக்கு ச - வும்,


சா - வுக்கு சா - வும்


என ஒரே எழுத்து ஒன்றுக்கொன்று #இயல்பாக_மோனை_பெறும்.


அவ்வாறே 12 உயிர் எழுத்தோடு சேரும் 18 மெய்யெழுத்துகளுக்கும் உயிர் மெய்யெழுத்துகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.


02. #இன_மோனை.


இனம் என்பதால் வல்லின, மெல்லின மற்றும் இடையின எழுத்துகளை இந்த எழுத்துகளுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.


ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாகும்.


#உயிரெழுத்துக்களில் #மூன்று_இனங்களும்,

#மெய்யெழுத்துக்களில்_மூன்று_இனங்களும்_உள்ளன.


அவற்றைக் கீழே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.


#உயிரெழுத்து_இன_மோனைகள்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

01. அ, ஆ, ஐ, ஔ


02. இ, ஈ, எ, ஏ, யா மற்றும்


03. உ, ஊ, ஒ, ஓ.


இவை ஒன்றுக்கொன்று மோனையாகும்.


#மெய்யெழுத்தில்_மூன்று_இனங்கள்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

மேற்கண்ட மூன்று இன உயிரெழுத்துகள் 18 மெய்யெழுத்துகளுடன் சேரும் போது அவை தனித் தனியே மெய்யெழுத்து மோனைகளாகும்.


உ - ம்:

- - - - - - - -

இரண்டு உயிர்மெய் எழுத்துகளுக்கு மட்டும் இங்கே எழுதிக் காட்டுகிறேன்.


க, கா, கை, கெள,


கி, கீ, கெ, கே,


கு, கூ, கொ, கோ.


ச, சா, சை, செள.


சி, சீ, செ, சே.


சு, சூ, சொ, சோ.


என 18 மெய்யெழுத்துகளும் 12 உயிரெழுத்துகளுடன் புணர்ந்து இன மோனையாகும்.


இவையன்றி மெய்யெழுத்தில் இன்னும் மூன்று எழுத்துகள் உண்டு.


#மெய்யெழுத்து_சிறப்பு_இனங்கள்.


01. ஞ், ந்


02. ம், வ் மற்றும்


03. த், ச்


இவை ஒன்றுக்கொன்று மோனையாகும்.


ஞ, ந.


ம, வ.


த, ச


இவற்றொடு சேரும் இன உயிர் எழுத்துகளும் ஒன்றுக்கொன்று மோனையாகும்.


பாடல்களில் இயல்பு மோனை வந்தால் வெகு சிறப்பு.


அவ்வாறின்றி வரும் இன மோனைகளும் சிறப்பு தான்.


மோனையைப் பொறுத்த வரையில் இயல்பு மோனை இன மோனை இரண்டுமே பாடல்களில் ஏற்புடையதே.


இந்த விளக்கம் மோனையைப் பற்றி ஒரு தெளிவை உங்களுக்குக் கொடுக்கும் என நம்புகிறேன்.


#ஒரு_பாடல் அல்லது #கவிதையின்_சீர்களிலோ, #அடிகளிலோ_முதல்_எழுத்து_ஒன்றி_வருவது_மோனை என்றும் அந்த #மோனை_எழுத்துகளைப் பற்றியும் பார்த்தோம்.


இனி, பாடல்களில் வரும் மோனை வகையைப் பார்ப்போம்.


#பாடல்களில்_மோனை_பயின்று_வரும்_போது_அதனை_இரண்டு_வகைப்_படுத்துவர்.


#அவை,


01. அடி மோனை மற்றும்


02. சீர் மோனை எனப் படும்.


01. #அடி_மோனை.

- - - - - - - - - - - - - - - - - -

குறைந்த பட்சம் முதலடி முதலெழுத்தும் இரண்டாம் அடி முதலெழுத்தும் ஒன்றி வருவது அடி மோனையாகும்.


உ - ம்:

- - - - - -

#தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்தபின் 

#தன்னெஞ்சே தன்னைச் சுடும்.


தன்னெஞ் - தன்னெஞ்சே - ‘த - த’ இயல்பு அடி மோனை.


#ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

#உயிரினும் ஓம்பப் படும்.


ஒழுக்கம் - உயிரினும் - ‘ஒ - உ’ இன அடி மோனை ஆனது.


02.  #சீர்_மோனை:

- - - - - - - - - - - - - - - - -


சீர் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனை ஆகும்.


உ - ம்:

- - - - - -

#க ற்க #க சடற #க ற்பவை #க ற்றபின்

நிற்க அதற்குத் தக.


நான்கு சீர்களிலும் முதலெழுத்து ‘’க’’ வர இயல்பு சீர் மோனை ஆனது. இதனை முற்று மோனை என்பர். இன மோனைகளும்(க, கா, கை, கெள) ஏற்புடையதே.


#சீர்_மோனை_ஏழு_வகைப்_படும். #அவை,


02. 01. #இணை_மோனை - ஒன்றாம் சீரும், இரண்டாம் சீரும் மோனை வரத் தொடுப்பது.


#ஒ ழுக்கம் #உ டைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும். குறள் - 133.


ஒழுக்கம் உடைமை - ‘’ஒ - உ’’ - ஒன்றாம் சீரிலும், இரண்டாம் சீரிலும் இன மோனை வருகிறது.


02. 02. #பொழிப்பு_மோனை - ஒன்றாம் சீரும், மூன்றாம் சீரும் மோனை வரத் தொடுப்பது.


#ந ன்றிக்கு வித்தாகும் #ந ல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும். குறள் - 138.


நன்றிக்கு - நல்லொழுக்கம் - ‘’ந - ந’’ - ஒன்றாம் சீரிலும், மூன்றாம் சீரிலும் இயல்பு மோனை வருகிறது.


02. 03. #ஒரூஉ_மோனை - ஒன்றாம் சீரும், நான்காம் சீரும் மோனை வரத் தொடுப்பது.


#ஒ ழுக்கம் விழுப்பம் தரலான் #ஒ ழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும். குறள் - 131.


ஒழுக்கம் - ஒழுக்கம் - ‘’ஒ - ஒ’’ - ஒன்றாம் சீரிலும், நான்காம் சீரிலும் இயல்பு மோனை வருகிறது.


02. 04. #கூழை_மோனை - ஒன்றாம் சீரும், இரண்டாம் சீரும், மூன்றாம் சீரும் மோனை வரத் தொடுப்பது.


#ஒ ழுக்கத்தின் #ஒ ல்கார் #உ ரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து. குறள் - 136.


ஒழுக்கத்தின் - ஒல்கார் - உரவோர் - ‘’ஒ - ஒ - உ’’ - ஒன்றாம் சீரிலும், இரண்டாம் சீரிலும், மூன்றாம் சீரிலும் இன மோனை வருகிறது.


02. 05. #கீழ்க்கதுவாய்_மோனை - ஒன்றாம் சீரும், இரண்டாம் சீரும், நான்காம் சீரும் மோனை வரத் தொடுப்பது.


#இ ருள்சேர் #இ ருவினையும் சேரா #இ றைவன்

பொருள்சேர் புகல்புரிந்தார் மாட்டு. குறள் - 05.


இருள்சேர் - இருவினையும் - இறைவன் - ‘’இ - இ - இ’’ - ஒன்றாம் சீரிலும், இரண்டாம் சீரிலும், நான்காம் சீரிலும் இயல்பு மோனை வருகிறது.


02. 06. #மேற்கதுவாய்_மோனை - ஒன்றாம் சீரும், மூன்றாம் சீரும் நான்காம் சீரும் மோனை வரத் தொடுப்பது.


#செ ய்க பொருளைச் #செ றுநர் #செ ருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில். குறள் - 759.


செய்க - செறுநர் - செருக்கறுக்கும் - ‘’செ - செ - செ’’ - ஒன்றாம் சீரிலும், மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் இயல்பு மோனை வருகிறது.


02. 07. #முற்று_மோனை - ஒன்றாம் சீரும், இரண்டாம் சீரும், மூன்றாம் சீரும் நான்காம் சீரும் மோனை வரத் தொடுப்பது. அதாவது ஓர் அடியின் நான்கு சீர்களிலும் மோனை வரத் தொடுப்பது.


#வை யத்துள் #வா ழ்வாங்கு #வா ழ்பவன் #வா னுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். குறள் - 50.


வையத்துள் - வாழ்வாங்கு - வாழ்பவன் - வானுறையும் - ‘’வை - வா - வா - வா’’ - ஒன்றாம் சீரிலும், இரண்டாம் சீரிலும், மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் இன மோனை வருகிறது.


அதாவது ஓர் அடியின் நான்கு சீர்களிலும்(முற்றிலும்) இன மோனை வருகிறது.


02. 08. வழி மோனை(01, 02, 03, 04, 05, 06, 07 ஆம் சீர்கள்)

பாடலின் அனைத்துச் சீர்க்ளிலும் மோனை வரத் தொடுப்பது வழி மோனை ஆகும்.


உ - ம்:

#சொ ற்களில் #சூ டெதற்கு #சூ தில்லா #சொ ற்கள்தான்

#சு ற்றமுடன் #சு ற்றும் #தொ ழுது.


அனைத்துச் சீர்களிலும் – “சொ – சூ – சூ – சொ – சு – சு -தொ” – என ஏழு சீர்களிலும் இன மோனை வருகிறது.


இது வழிமோனை வர புனையப் பட்ட குறள் வெண்பா ஆகும்.


இதனைப் படிக்கும் போது மோனை என்றால் என்ன என்பதில் ஒரு தெளிவு கிடைக்கும் என நினைக்கிறேன்.


மோனையில் சந்தேகம் வரும் போது இந்தப் பதிவை ஒருமுறை திருப்பிப் பார்த்துக் கொள்ளுங்கள்.


அடுத்து #எதுகை_என்றால்_என்ன என்று பார்க்கலாம்.


………………….……....……


Comments

  1. மிகத் தெளிவான விளக்கம் ஐயா. மிக்க நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)