4.வெண்பா இலக்கணம் (அகன்)

 வெண்பா இலக்கணம் -  04.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 

#சொற்களும், #சீர்களும்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - -

சொற்கள் என்றால் என்ன…

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஓரெழுத்துச் சொல் தொடங்கி அதிக பட்சமாக ஒற்றெழுத்தும் சேர்த்து ஆறு எழுத்துகள் வரை சொற்கள் கட்டமைக்கப் படும். இதனை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.


சொற்கள் கதை, கட்டுரை போன்றவற்றை எழுதப் பயன்படும். கூட்டுச் சொற்களை ஒரு சொல்லாக அலகிட முடியாது.


சீர்கள் என்றால் என்ன…

- - - - - - - - - - - - - - - - - - - - - - -

சீர்களில் ஓரசைச் சீர் தொடங்கி மூவசைச் சீர்கள் வரை ஏற்கனவே விளக்கி இருக்கிறேன்.


நீ, பூ, நான், நாம், நலம், வலம், பழம், நிலம், முலாம், படார் போன்றவை ஒரு சொல் ஓரசைச் சீர்கள்.


நிலவு, கனவு, காதல், மேகம், புன்னகை, சில்லறை, வானம், தொடாதே, வராதே போன்றவை ஒரு சொல் ஈரசைச் சீர்கள்.


நீதான்(நீ + தான்), என்மகள்(என் + மகள்), பொன்மகள்(பொன் + மகள்) போன்றவை இரு சொற்கள் ஈரசைச் சீர்கள்.


கண்ணனவன்(கண்ணன் + அவன்), ஏருழவன்(ஏர் + உழவன்), பகல்பொழுது(பகல் + பொழுது) போன்றவை இரு சொல் மூவசைச் சீர்கள்.


சீர்களில் ஒரு சொல் சீர்கள் உண்டு. இரு சொற்கள் சேர்ந்து வரும் சீர்களும் உண்டு என்று பார்த்தோம்..


இங்கே ஒரு திருக்குறளைப் பார்ப்போமா…


(01)அகர - (02)முதல - (03)எழுத்தெல்லாம் - (04)ஆதி

(05)பகவன் - (06)முதற்றே - (07)உலகு.


குறள் வெண்பா முதலடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் ஆக #ஏழு_சீர்கள் பெற்று வரும்.


சொல் கணக்கென்றால், 03 ஆம் சீரைப் பாருங்கள். #எழுத்தெல்லாம் - எழுத்து + எல்லாம் என இரண்டு சொற்கள் இருக்கிறதா… ஆக, இந்தக் குறளில் எட்டு சொற்கள் இருக்கின்றன.


இந்தத் திருக்குறளில் #சீர்கள்எனில்ஏழும், #சொற்கள்எனில்எட்டும்_வருகின்றன.


மரபுக் கவிதைகளில் சீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். சரியா…


அஃதன்னியில் ஒரு சொல் இரண்டாகப் பிரிந்து முதல் சொல்லுடன் பாதியும் தனித்தோ அல்லது இரண்டாம் சொல்லுடன் பாதியும் சேர்ந்தோ ஒரே சீராக வருவதும் உண்டு.


அவ்வாறு வரும் சீர்களை #வகையுளி என்பர்.


வகையுளி என்றால் என்ன…

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஒரு திருக்குறளைப் பார்ப்போம்.


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.


வெண்பாக்களில் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும் என்று படித்தோம் அல்லவா…


வேண்டுதல் - வேண்டாமை = விளம் முன் நேர் - இயற்சீர் வெண்டளை.


வேண்டாமை - இலானடி = காய் முன் நிரை - #கலித்_தளை.


இலானடி - சேர்ந்தார்க்கு = விளம் முன் நேர் - இயற்சீர் வெண்டளை.


சேர்ந்தார்க்கு - யாண்டும் = காய் முன் நேர் - வெண்சீர் வெண்டளை.


யாண்டும் - இடும்பை = மா முன் நிரை - இயற்சீர் வெண்டளை.


இடும்பை - இல = மா முன் நிரை - இயற்சீர் வெண்டளை.


இந்தத் திருக்குறள் வெண்பாவில் ஒரு இடத்தில் கலித் தளை வருகிறது.


திருக்குறள் வெண்பா இலக்கணத்துக்குப் பொருந்த வில்லை.


திருவள்ளுவர் தவறாக எழுதி விட்டாரா…? இல்லை.


நாம் சீர் பிரிப்பதில் பிழை செய்து விட்டோம்.


வேண்டுதல் - வேண்டாமை எனச் சீர் பிரிக்கக் கூடாது.


வேண்டுதல்வேண் - டாமை எனச் சீர் பிரிக்க வேண்டும்.


வேண்டாமை என்னும் ஒரு சொல் வேண் - டாமை என பிரிந்து வேண்டுதல்வேண் - டாமை ஆனது. இப்போது தளை பாருங்கள்.


வேண்டுதல்வேண் - டாமை = காய் முன் நேர் - வெண்சீர் வெண்டளை. சரியாக இருக்கிறதா,,,


இப்படி சீர் ஒழுங்குக்காக ஒரு சொல் இரண்டாகப் பிரிவதைத் தான் ‘’வகையுளி’’ என்பர்.


மரபுக் கவிதகளில் ஓசை நயத்துக்காக சொற்கள் இவ்வாறு பிரிந்து பொருள் கொடுக்கும்.


#நேரிசை_வெண்பா.

.- - - - - - - - - - - - - - - - - -


ஒரு விகற்ப நேரிசை வெண்பா.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

நான்கு அடிகளின் முதல் சீர்கள் மற்றும் தனிச் சொல் அனைத்தும் ஒரே எதுகைப் பெற்று வந்தால் அஃது 


#ஒருவிகற்பநேரிசைவெண்பாஆகும்.


உ - ம்:

- - - - - - -

……...…- ஒரு விகற்ப நேரிசை வெண்பா -


போகட்டும் போதையுடன் போக்கத்தப் பெண்டிர்கள்

தாகத்தில் தன்மானம் தானிழந்தார் - வேகமுடன்

சாகத் துணிந்தவர்க்குச் சாக்காட்டுத் தாழ்திறக்கும்

ஆகட்டும் அப்படியே ஆம்.


நான்கு அடிகளிலும் இரண்டாம் எழுத்து ‘க’ ஒன்றி வர, இரண்டாம் அடியில் நான்காம் சீர் தனிச் சீராகக் ( -- ) கோடிட்டுக் காட்டப் பட்டுள்ளது. அந்தத் தனிச் சீரிலும் இரண்டாம் எழுத்து ‘க’ என்பதைக் கவனிக்கவும்.


ஐந்து சீர்களிலும் முதல் எழுத்து நெடில் எழுத்தாக(போ, தா, வே, சா, ஆ) வந்திருப்பதை கவனிக்கவும்.


#பொழிப்பு_மோனை:

- - - - - - - - - - - - - - - - - - -

வெண்பாவின் நான்கு அடிகளிலும் முதல் சீர் முதல் எழுத்துக்கு மூன்றாம் சீர் முதல் எழுத்து (போ -போ, தா -தா, சா - சா, ஆ - ஆ) ஒன்றி வருவதைப் பாருங்கள்.


இதுவே பொழிப்பு மோனை ஆகும்.


ஆகவே இஃது ஒரு விகற்ப நேரிசை வெண்பா ஆனது.


இருவிகற்ப நேரிசை வெண்பா.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

இரண்டாம் அடியில் தனிச் சொல் பெற்று வரும்.


முதல் இரண்டடிகளில் முதல் சீர்கள் ஒரு எதுகை பெற்று வரும்.


தனிச் சொல் முதல் இரண்டடிகளின் முதல் சீர் எதுகையையே பெற்று வரும்.


பின்னிரண்டு அடிகள் வேறு எதுகை பெற்று வரும்.


இஃது இரு விகற்ப நேரிசை வெண்பா எனப் படும்.


….........- இரு விகற்ப நேரிசை வெண்பா -


#தொட்டால் பரவுமாம் #தும்மல் இருமலுடன்

#சுட்டுக் கொளுத்துமாம் #தொற்றுநோய் - விட்டால்

#உயிரெடுக்கும் வண்ணம் #உலவும் கொரோனா

#செயலறுக்க ஒன்றிணைவோம் சேர்ந்து.

எதுகை மோனைகளைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.


#இன்னிசை_வெண்பா.

- - - - - - - - - - - - - - - - - - - - -

நேரிசை வெண்பாவிற்குரிய அனைத்து இலக்கணமும் பொருந்தும். இரண்டாம் அடியில் #தனிச்_சொல் பெற்று வராது.


..........- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா -


#யோகிகளின் ஆதவன்நீ #யுக்திகளின் கோட்டையும்நீ

 #போகிகளின் போதையும்நீ #போக்கறிந்த சாரதியே

 #தேகியும்நீ தேசமும்நீ #தேவமகன் ஆதியும்நீ

 #ஆகியவை அத்தனையும் ஆம்.


.......- இரு விகற்ப இன்னிசை வெண்பா -


#குழலி இசைக்கும் #குழலோசைக் கேட்டாங்(கு)

 #அழகு கடல்மகள் #ஆர்ப்பரித்தாள் பொங்கும்

 #அலையோசை ஆங்கிசைக்க #ஆஹா அடடா

 #தலையாட்டி வைக்கும் சகம்.


வெண்பாவில் ஈற்றடியான சிந்தடியில் முதல் சீருக்கு மூன்றாம் சீர் மோனை வந்தால் சிறப்பு. #கட்டாயமில்லை.


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)