ஹைக்கூ விளக்கம் (அகன்)
ஹைக்கூ என்றால் என்ன?
^> - <^> - <^> - <^> - <^> - <^>
‘’#ஹைக்கூ_என்றால்_என்ன?’’ என்று எனக்குத் தெரிந்ததையே, நான் அறிந்ததையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மூன்று அடிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் கொண்டு அமைவது ஹைக்கூ என்று தெரியும்.
குத்து மதிப்பாக, தமிழில்
இரண்டு சீர்கள்(ஐந்து அசைகள்), ஜப்பானில் ஐந்து எழுத்துகள்.
மூன்று சீர்கள்(ஏழு அசைகள்), ஜப்பானில் ஏழு எழுத்துகள்.
இரண்டு சீர்கள்(ஐந்து அசைகள்) ஜப்பானில் ஐந்து எழுத்துகள் என
17 அசைகள் - ஜப்பானில் 17 எழுத்துகள் - கொண்டு அமைக்கப் பெறும்
#ஜப்பானியக்_கவிதை_வடிவம்_ஹைக்கூ..
ஜப்பானிய மொழியில் ஓர் எழுத்து = தமிழ் மொழியில் ஓர் அசை.
சரி, தமிழுக்கு வருவோம்..
அசைகள் இரண்டு. அவை,
நேர் அசை, நிரை அசை:
அசைகளின் சேர்க்கையே சீர்:
சீர் ஓரசைச் சீர்,
ஈரசைச் சீர்,
மூவசைச் சீர்,
நான்கசைச் சீர் என பல வகைப் படும்
ஹைக்கூ மிகக் குறைந்த சொற்களைக் கொண்டு நேரடியாகவும், மறைமுகமாவும் அதிக கருத்துகளை வெளிப் படுத்துகிறது என்பதே உண்மை.
நோக்கம் போல கட்டுப் பாடில்லாமல் எழுதுவதையும், சீர் அசை இலக்கணத்துக்குக் கட்டுப் படாததையும், தனக்கென ஒரு புது இலக்கணத்தைத் தானே படைத்துக் கொள்வதையும் #ஹைக்கூ என்று ஏற்றுக் கொள்ள என் மனம் இடம் கொடுக்க வில்லை.
இப்போது, பெரும்பாலும் இந்த விதிமுறைகள் பின்பற்றப் படுவதில்லை. காரணம்,
#நமக்குத்_தான்_இலக்கணம்_என்றால்_வேப்பங்காய்_ஆயிற்றே.
ஹைக்கூவின் புதிய பரிமாணத்தின் விளக்கங்களை பல குழுமங்களில் தெளிவாகச் சுட்டிக் காட்டிய பின்னரே போட்டியை அறிவிக்கின்றனர்.
ஆனாலும், வழக்கம் போல் நம் கவிப் பெருந்தகைகள் அவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளாமலேயே ‘’ஹைக்கூ’’ எழுதி பதிவு செய்து விடுகின்றனர்.
ஹைக்கூவின் தன்மைகளே இல்லாத சில எழுத்துகளுக்கும் சான்றிதழ்கள் அளிக்கப் படுகின்றன என்ற விவாதங்கள் முகநூலில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன..
#நிபந்தனை 01.
01. ஹைக்கூ #மூன்று_வரிகளில் அல்ல,
#மூன்று_அடிகளில் இருக்க வேண்டும்.
02. முதல் அடியில் #ஐந்து_அசைகள் -
.......#இரண்டு_சீர்கள்_அமைவது_சிறப்பு.
........இரண்டாவது அடியில் #ஏழு_அசைகள் -
........#மூன்று_சீர்களாக_இருப்பின்_நலம்.
........மூன்றாவது அடியில் #ஐந்து_அசைகள் -
........#இரண்டு_சீர்கள்_அமைவது_சிறப்பு.
03. அது நிகழ்கால நிகழ்வை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
04. ஹைக்கூ கற்பனைகளையோ, உருவகம், உவமைப் போன்றவற்றை ஏற்காது.
#தற்கால_ஹைக்கூவாளர்கள் 02 வது நிபந்தனையை மீறும் போது....
தமிழ் இலக்கணப்படி கவிதையின் அடிப்படைக் கூறுகளான முக்காலத்தையும் குறிப்பது, கற்பனைகள், உருவகங்கள் மற்றும் உவமைகளை ஹைக்கூ ஏற்பது பிழையில்லை என்பதே என் கருத்து.
எனக்கு சீர் , அசை, தளை மற்றும் தொடை இலக்கணங்கள் தெரியாது.
15 சீர்களில் எழுத வேண்டிய வெண்பாவை 25 சீர்களில் எழுதி இருக்கிறேன் என்றால் நகைக்க மாட்டார்களா...?
ஒரு கட்டுக்குள், ஒழுங்குக்குள் அடங்கி இருப்பது தான் கவிதை.
அப்படி எனக்கு எழுத வராது... என் எண்ணங்களை யாரும் கட்டுப் படுத்தக் கூடாது என்றால் அது கவிதையல்ல, உரைநடை.
சரி, இனி ஹைக்கூவுக்குள் போகலாம்.
ஓர் இலக்கணமில்லாத எடுத்துக் காட்டைப் பார்ப்போம்.
#நேற்றைய_பொழுதில்
#நல்ல_வெயில்_அடித்தது.
#மழையும்_பெய்தது.
இந்தப் பதிவில் முதலடியில் 4 அசைகளும், இரண்டாம் அடியில் 5 அசைகளும் மூன்றாம் அடியில் 4 அசைகளும் இருக்கின்றன.
இந்த மூன்று அடிகள் என்ன சொல்கின்றன?
நேற்றைய நிகழ்வைச் சொல்கிறது. கண்டிப்பாக இது ஹைக்கூ கவிதை அல்ல.
இஃது ஒரு கடந்த காலச் சம்பவம். அதைத் தான் சொல்கிறது இந்த மூன்று அடிகள். அவ்வளவே.
இதில் எங்கே கவித்துவம் இருக்கிறது?
இந்த நிகழ்வை கிராமப் புறங்களில், ‘’எலிக்கும், பூனைக்கும் கல்யாணம்’’ என்று சொல்லி சிறு பிள்ளைகள் நகைப்பார்கள்.
கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன். முதலில் பதிவைப் பார்ப்போம்.
நேற்றைய பொழுதில்
நல்ல வெயில் அடித்தது.
நேற்றைய பொழுதில் நல்ல வெயில் அடித்ததை முதல் இரண்டு அடிகளும் சொல்கின்றன.
நல்ல வெயில் அடித்தது.
மழையும் பெய்தது.
வெயிலும் அடிக்கும், மழையும் பெய்யும் இதை நாம் பார்த்திருக்கிறோம்.
முதல் இரண்டு அடிகள் சொல்லும் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை இந்த நிகழ்வு சொல்கிறதா என்றால் இல்லை.
ஒரு சம்பவத்தை ம்ட்டுமே சொல்லி இருக்கிறது. இதில் எங்கே கவித்துவம் இருக்கிறது?
சரி, இப்போது ஒரு ஹைக்கூவைப் பார்ப்போம்.
#ஆற்றில்_புதுவெள்ளம்
#அள்ளிச்_செல்ல_முடியவில்லை.
#வீடு_கட்ட_மணல்.
ஆற்/ றில் - புது/வெள்/ளம்.
நேர் நேர் - நிரை நேர் நேர்………............…..= 5 அசைகள்.
அள்/ ளிச் - செல்/ ல - முடி/ யவில்/ லை.
நேர் நேர் - நேர் நேர் - நிரை நிரை நேர்.....= 7 அசைகள்.
வீ/ டு - கட்/ட - மணல்.
நேர் நேர் - நேர் நேர் - நிரை……………...…..= 5 அசைகள்.
இந்தப் பதிவில் முதலடியில் 5 அசைகளும், இரண்டாம் அடியில் 7 அசைகளும் மூன்றாம் அடியில் 5 அசைகளும் இருக்கின்றன.
ஹைக்கூவின் இலக்கணம் சரியாக இருக்கிறதா…? இருக்கிறது.
இலக்கணம் மட்டும் சரியாக இருந்தால் போதுமா…? போதாது. அது உயிரில்லாத உடல் போன்றதே.
உயிரும் - கருத்தும், கவித்துவமும் - இருக்க வேண்டும்.
இந்த மூன்று அடிகள் என்ன சொல்கிறது?
நிகழ்கால நிகழ்வைத் தான் இதுவும் சொல்கிறது. இது மட்டும் எப்படி ஹைக்கூ ஆகும்?
சரி, ஹைக்கூ கவிதைக்கு வருவோம். முதல் இரண்டு அடிகளைப் பார்ப்போம்.
ஆற்றில் புதுவெள்ளம்
அள்ளிச் செல்ல முடியவில்லை.
ஆற்றில் புதுவெள்ளம் - தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. புது வெள்ளம் என்பதால் அந்த நீர் அழுக்குகள் கலந்து நுரையோடு இருக்கிறது.
தாகம் தீரப் பருகுவதற்கு அந்த நீரை அள்ள முடியவில்லை. சரி தானே…?
ஆற்று நீரை அள்ளிப் பருக முடியவில்லை என்பது பொருள்.
கடைசி இரண்டு அடிகளைப் பார்ப்போம். அவை என்ன சொல்கின்றன…?
அள்ளிச் செல்ல முடியவில்லை.
வீடு கட்ட மணல்.
‘’அள்ளிச் செல்ல முடியவில்லை’’ - எதை?
முதல் இரண்டு அடிகளில் வந்த ‘’அள்ளிச் செல்ல முடியவில்லை’’ - சொன்னது நீரை
.
கடைசி இரண்டு அடிகளில் வந்த ‘’அள்ளிச் செல்ல முடியவில்லை.’’ சொல்வது மணலை.
இங்கு தான் ஒளிந்திருக்கிறது கவித்துவம்.
ஆக, இந்த ஹைக்கூ சொல்ல வருவது என்னவென்றால்,
ஆற்றில் புதுவெள்ளம்
அள்ளிச் செல்ல முடியவில்லை - #நல்ல_நீரை
என்பதைச் சொல்லாமல் புரிய வைக்கிறது.
அள்ளிச் செல்ல முடியவில்லை
வீடு கட்ட மணல்.
முதல் இரண்டடிகள் நீரைக் குறிக்க....
கடைசி இரண்டடிகள் மணலைக் குறிக்கிறது.
முற்றிலும் ஒரு புதிய திருப்பம்…. ஆனாலும், ஆற்றோடு தொடர்புடைய திருப்பம்.
இந்த ஹைக்கூ ஆற்றோடு தொடர்புடைய முற்றிலும் மாறுபட்ட இரண்டு பொருளை - நீர், மணல் - உணர்த்துகிறது.
எனவே, ஹைக்கூ என்றதும் மூன்று அடிகளில் சம்பவங்களை எழுதாதீர்கள். கவித்துவத்தை எழுதுங்கள்.
எனக்குத் தெரிந்ததைத் தான் எழுதி இருக்கிறேன்.
இலக்கண மேடைக்குள் ஆடும் வரை #அது_பரத_நாட்டியம்.
மேடையை விட்டு கீழே இறங்கி Audience மத்தியில் ஆடினால் #அது_Club_Dance.
ஜனரஞ்சகமாக இருக்கும். அவ்வளவே.
……….....................- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
Comments
Post a Comment